கார் வாட்டர் சர்வீஸ் நிறுவனத்தில் மின்சாரம் தாக்கி தொழிலாளி பலியான சம்பவம் உயிரிழந்தவரின் உடலை பார்த்து அவரது உறவினர்கள் கதறி அழுத சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

தேனி மாவட்டம், அடுத்த பெரியகுளம் அருகே உள்ள டி.கள்ளிப்பட்டியை சேர்ந்தவர் பெருமாள் (51). இவர் தனது மனைவி பரமேஸ்வரி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவர் தேனி அன்னஞ்சி விளக்கு பகுதியில் உள்ள தனியார் வாட்டர் சர்வீஸில் வேலை பார்த்து வருகிறார்.

இந்த நிலையில் வழக்கம் போல் வேலைக்குச் சென்றவர் அங்கு உள்ள வாகனத்திற்கு தண்ணீர் அடித்து சுத்தம் செய்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே துடித்துடித்து உயிரிழந்துள்ளார்.
இதனை கண்டு அருகில் இருந்தவர்கள் பெருமாளின் உறவினருக்கு மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த அல்லிநகரம் போலீசார் உயிரிழந்த பெருமாளின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஆம்புலன்ஸ் மூலம் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உயிரிழந்த பெருமாளின் உறவினர்கள் அவரது உடலை பார்த்து கதறி அழுத சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் அல்லிநகரம் போலீசார் தலைமறைவாகிய வாட்டர் சர்வீஸ் உரிமையாளரை தேடி வருகின்றனர்.