விழுப்புரம் மாவட்டத்தில் அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலகத்தை தொழிற்சங்கத்தினர் முற்றுகையிட்டனர். மேலும் பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்ட பஸ்களை அவர்கள் மறித்ததால் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.
தமிழகத்தில் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும். ஓய்வூதியர்களுக்கான நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து கழக அண்ணா தொழிற்சங்கம் சி.ஐ.டி.யு உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இச்சங்கத்தினர் அந்தந்த போக்குவரத்து கழக பணிமனைகள் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

அந்த வகையில் விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகம் முன்பு நடந்த முற்றகை போராட்டத்திற்கு ஓய்வு பெற்றோர் நல சங்க மண்டல செயலாளர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார். பின்னர் பொதுச்செயலாளர் ரகோத்தமன் ஆகியோர் கண்டன உரையாற்றினார். அதில் அண்ணா தொழிற்சங்க பொதுச் செயலாளர், கணேசன் நிர்வாக பணியாளர் சங்க மண்டல பொறுப்பாளர், தங்கபாண்டியன் எம்.எல்.எப் தொழிற்சங்க மாநில பொதுச் செயலாளர், மனோகர் பாட்டாளி தொழிற்சங்க தலைவர், ஞானதாஸ் தேமுதிக தொழிற்சங்க மண்டல செயலாளர், ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர் .
இதேபோல் இவர்கள் விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகப் பணிமனை எண் 1,2,3 ஆகியவற்றின் முன்பும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடாமல் பணியில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து தொழிலாளர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து வெளியே வந்த பஸ்களில் போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் மறித்து போராட்டம் செய்தனர். அப்போது பஸ்களை இயக்கிய உங்களுக்கு மெரினாவில் சிலை வைக்கப்படும் என்று எழுதிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது உடனே விழுப்புரம் தாலுகா போலீசார் அங்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை அங்கிருந்து கலைந்து போக செய்தனர். இதைப்போன்று திண்டிவனத்தில் உள்ள போக்குவரத்துக் கழகப் பணிமனை முன்பு வேலை நிறுத்தத்தில் பங்கேற்றுள்ள தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னதாக அங்கு இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இதேபோல் செஞ்சி உள்ளிட்ட போக்குவரத்து கழக பணிமனைகள் முன்பும் போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.