விலை உயர்ந்த செல்போன், உடைகள் வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி, 16 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய கொடூர அத்தையை மகளிர் போலீசார் கைது செய்தனர்.
கோயம்பேடு பகுதியில், 16 வயது சிறுமியை அவரது சொந்த அத்தையே பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதாக, கடந்த 1-ம் தேதி கோயம்பேடு அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு, கண்ணகி நகர் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பேரில், துணை ஆணையர் உமையாள் உத்தரவின்படி, இன்ஸ்பெக்டர் ராஜலட்சுமி தலைமையில் விசாரணையில் ஈடுபட்டனர்.

இதில், 16 வயது சிறுமியை அவரது அத்தையே பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது தெரியவந்தது. பின்னர் பாதிக்கப்பட்ட சிறுமியிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில், பல திடுக்கிடும் தகவல் வெளியானது. இதுபற்றி போலீசார் கூறியதாவது;-
செம்மஞ்சேரி பகுதியை பரிந்துரைகள் சேர்ந்த அந்த 16 வயது சிறுமி, தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுமி, கடந்த மாதம் பள்ளி விடுமுறை நாளில், கண்ணகி நகர் பகுதியில் உள்ள தனது அத்தை வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது, சிறுமிக்கு விலை உயர்ந்த போன், உடைகள், அழகு சாதனங்கள் உள்ளிட்டவை வாங்கி தருவதாக அவரது அத்தை ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

மேலும், “நான் சொல்லும்படி நடந்து கொண்டால், ஜாலியாக இருக்கலாம். அதிகளவில் பணமும் கிடைக்கும். அதை வைத்து ஆடம்பரமாக வாழலாம். இதனால் எந்த பிரச்சனையும் வராது. நான் பார்த்துக்கொள்கிறேன்,” எனவும் கூறியுள்ளார். முதலில் தயங்கிய சிறுமி, பின்னர் அத்தை கொடுத்த தைரியத்தால், சம்மதம் தெரிவித்துள்ளார்.
இதை அடுத்து, கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு சிறுமியை அழைத்து சென்ற அவரது அத்தை, அங்கு ஒரு வாலிபரிடம் பணம் வாங்கிக்கொண்டு, வேளச்சேரியில் உள்ள வீட்டில் தங்க வைத்து, சிறுமியை பாலியல் தொழில் ஈடுபடுத்தியுள்ளார். ஒரு கட்டத்தில் இது வேண்டாம், என்று சிறுமி கூறியும், அவரது அத்தை கட்டாயப்படுத்தி, சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளார்.

பின்னர், அங்கிருந்து வீடு திரும்பிய சிறுமி, இதுபற்றி தனது தந்தையிடம் கூறி அழுதுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தந்தை, கண்ணகி நகரில் உள்ள தனது தங்கை வீட்டிற்கு சென்று, தகராறில் ஈடுபட்டு, அவரை சரமாரியாக வெட்டியுள்ளார். இது குறித்த புகாரின் பேரில், கண்ணகி நகர் போலீசார் வழக்கு பதிந்து, சிறுமியின் தந்தையை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

பின்னர், கண்ணகி நகர் போலீசார் அளித்த தகவலின் பேரில், கோயம்பேடு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசாருக்கு இந்த விவரம் தெரியவந்துள்ளது. இதை அடுத்து போலீசார், சிறுமியின் அத்தை மற்றும் இதற்கு உடந்தையாக இருந்த அவரது தோழிகள் 2 பேரை நேற்று அதிகாலை கண்ணகி நகரில் வைத்து, கைது செய்துள்ளனர்.

கோயம்பேடு அனைத்து மகளிர் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆடம்பர வாழ்க்கை வாழலாம், என ஆசை வார்த்தை கூறி சிறுமியை அவரது அத்தையே பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.