விழுப்புரம் செஞ்சியில் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை முன் விரோதம் காரணமாக அதிமுக நகர கழக செயலாளர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய சம்பவத்தில், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விழுப்புரம் மாவட்டம், அருகே செஞ்சி அதிமுக நகர கழக செயலாளராக வெங்கடேசன் என்பவர் கட்சி பதவி வகித்து வருகிறார்.

இவருக்கும் செஞ்சி திருவண்ணாமலை சாலையில் SBI வங்கி எதிரில் டீக்கடை நடத்தி வரும் ராஜேந்திரன் என்பவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக ஏற்கனவே பிரச்சனை ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று இரவு வெங்கடேசன் வங்கியில் ஏடிம் மையத்திற்கு பணம் எடுக்க சென்றதாக தெரிகிறது. அப்போது அங்கு வந்த ராஜேந்திரன் மற்றும் அவரது மனைவி கல்பனா ஆகியோர் வெங்கடேசன் இடம் பிரச்சனை செய்துள்ளனர்.

அப்போது ராஜேந்திரன் மரக்கட்டையால் வெங்கடேசன் தலையில் பலமாக தாக்கியதில் தலையில் ரத்தம் சொட்ட சொட்ட வெங்கடேசன் அங்கேயே மயங்கி விழுந்துள்ளார்.
பின்னர் ராஜேந்திரன் கல்லால் வெங்கடேசன் தலையில் தாக்கியதில் பலத்த ரத்த காயம் அடைந்த வெங்கடேசனை மீட்ட பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் செஞ்சி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.
இது குறித்த தகவலின் பெயரில் செஞ்சி காவல் ஆய்வாளர் பார்த்தசாரதி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ராஜேந்திரனை பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது முதற்கட்ட விசாரணையில் வெங்கடேசனுக்கும், ராஜேந்திரனுக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை ஏற்பட்டு முன்விரோதம் இருந்த நிலையில் இந்த தாக்குதல் நடந்ததாக தெரியவந்தது.
இதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த செஞ்சி போலீசார் ராஜேந்திரன் மற்றும் அவரது மனைவி கல்பனா ஆகியோர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அப்போது ராஜேந்திரன் கைது செய்யப்பட்ட நிலையில் அவரது மனைவி கல்பனாவை செஞ்சி போலீசார் தேடி வருகின்றனர். இந்த நிலையில் கல்லால் தாக்கப்பட்ட அதிமுக செஞ்சி நகர கழக செயலாளர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.