கடலூர் மாவட்டம், அருகே உள்ள தொட்டி பெரிய காலனியை சேர்ந்த ஒருவருக்கும், கோட்டக்குப்பத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் திருவந்திபுரம் சாலக்கரையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் இரவு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது.
அப்போது இந்த நிகழ்ச்சியில் இரு வீட்டாரையும் சேர்ந்த உறவினர்கள் கலந்து கொண்டனர். மேலும் உறவினர்கள் சிலர் திருமண மண்டபத்தின் வெளியே நின்று கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்து சாலக்கரை பகுதியை சேர்ந்த சிலர், திருமண வீட்டாருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அவர்கள் மீது கற்களை வீசி தாக்கியதாக தெரிகிறது.
அப்போது திருமண நிகழ்ச்சிக்கு வந்த பேருந்தின் கண்ணாடியையும் அடித்து உடைத்துள்ளனர். இதன் பின்னர் அங்கிருந்த மோட்டார் சைக்கிள்களையும் சேதப்படுத்தியுள்ளனர்.

இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த சுமார் 10-க்கும் மேற்பட்டோர் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.
இது குறித்து தகவல் அறிந்த கடலூர் எஸ்.பி ராஜாராம், டி.எஸ்.பி பிரபு மற்றும் ஏராளமான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் அசம்பாவித சம்பவங்களை நடக்காமல் இருக்க அந்த பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் அங்கு தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார், திருவந்திபுரம் அருகே உள்ள சாலக்கரை பகுதியை சேர்ந்த சுமார் 30 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
இதனால் அதேபகுதியை சேர்ந்த ராஜாராம் மகன் நரை என்கிற ரஞ்சித்குமார் வயது (27), வெங்கடேசன் மகன் மணி என்கிற பலூன் மணி வயது (19), காட்டு ராஜா மகன் விக்னேஷ் வயது (21) ராம மூர்த்தி மகன் சரத்குமார் வயது (29),

பழனி மகன் விக்னேஷ் வயது (21) ஆகிய 5 பேரை கைது செய்தனர். அப்போது இந்த சம்பவத்தில் தப்பி ஓடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர். அப்போது கைதானவர்கள் மீது போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.