இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடியால் தனுஷ்கோடி அரிச்சல்முனைப் பகுதிக்கு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் அகதிகளாக வந்தனர்.
இலங்கையில் தொடர்ந்து நிலவி வரும் பொருளாதார நெருக்கடியால் அத்தியாவாசிப் பொருட்களின் விலை தொடர்ந்து கடுமையாக உயர்ந்துள்ளது. ஒரு டீயின் விலை இலங்கை ரூபாய் மதிப்பில் ரூ 100 தீப்பெட்டி 25 ரூ என இருக்கும் இந்நிலையில் அத்தியாவாசியமான உணவுப் பொருள் மருந்து பொருட்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது .

தங்களால் குழந்தைகளுடன் இனி வாழ முடியாது என்று முடிவு செய்த ஒரு குடும்பத்தினர் நேற்று இரவு இலங்கை மன்னார் மாவட்டம் தாவுகாடு பகுதியை சேர்ந்த சாந்தக்குமார்அவரது மனைவி ரூபலெட்சுமி மற்றும் இரண்டு ஆண்குழந்தைகள் மற்றும் ஒரு பெண் குழந்தையென ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தங்களிடம் இருந்த நகை மற்றும் நிலத்தை விற்பனை செய்து இலங்கை பணம் ரூ, 2 லட்சம் படகுக்கு கொடுத்து அகதிகளாக படகில் புறப்பட்டு இன்று அதிகாலை 3.30மணியளவில் தனுஷ்கோடி அரிச்சல்முனைப் பகுதிக்கு வந்து இறங்கினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த ராமேஸ்வரம் மெரைன் காவல் துறையினர் அவர்களை மீட்டு குடிநீர், குழந்தைகளுக்கு பால் உள்ளிட்டவைகளை கொடுத்து மண்டபம் மெரைன் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

தனுஷ்கோடிக்கு வந்து இறங்கிய இலங்கை தமிழர்களிடம் மத்திய, மாநில உளவுத் துறையினர் மற்றும் பாதுகாப்பு துறை அதிகாரிகள் விசாரணைக்கு பிறகு 5 பேரும் மண்டபம் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு மையத்தில் ஒப்படைக்கப்பட உள்ளனர்.
இலங்கையில் கடந்த ஒரு வருடமாக நீடித்து வரும் பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக இலங்கையில் இருந்து இன்று வரை 237 பேர் அகதிகளாக தனுஷ்கோடியில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
இவர்கள் அனைவரும் பாதுகாப்பாக மண்டபம் கேம்ப் பகுதியில் அமைந்துள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தில் உணவுப் பொருள்கள் மற்றும் அடிப்படை வசதிகளுடன் தங்க வைக்கப்
பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.