பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசியதால் சவுக்கு சங்கர் தேனியில் கைது செய்யப்பட்டார். கோவை சைபர் க்ரைம் போலீசார் கைது நடவடிக்கையை மேற்கொண்டு அவரை கோவை அழைத்துச் சென்றனர்.
காவல்துறை அதிகாரிகள், பெண் காவலர்களை அவதூறாக பேசியதாக அவர் மீது கோவை சைபர் க்ரைம் போலீசார் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த நிலையில், சவுக்கு சங்கர் தேனி வந்திருப்பதாக கிடைத்த தகவலை ஒட்டி இன்று (சனிக்கிழமை) அதிகாலை 3 மணியளவில் தேனியில் ஒரு தனியார் விடுதியில் தங்கியிருந்த அவரை கோவை சைபர் க்ரைம் போலீசார் கைது செய்தனர்.
அங்கிருந்து அவர் கோவைக்கு அழைத்து சென்றனர். சவுக்கு சங்கர் தனது பணி நிமித்தமாக அடிக்கடி தேனி வந்து செல்வார் என தெரிகிறது. அந்த தகவலின் அடிப்படையிலேயே கோவை சைபர் க்ரைம் போலீசார் அவரை தேனியில் வைத்து கைது செய்துள்ளனர்.

இதற்கு தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொது செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூக வலைதளத்தில்;-
திமுக அரசின் ஊழல்களை தொடர்ந்து மக்களிடத்தில் அம்பலப்படுத்தும் சவுக்கு மீடியா ஊடகத்தை முடக்கும் முனைப்பில் அந்நிறுவன ஊழியர்கள் மற்றும் வாசகர்களை குறி வைத்து காவல்துறையை ஏவி பொய் வழக்குகளில் கைது செய்யும் அரசின் அராஜகப் போக்கிற்கு எனது கண்டனம்.

ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகளை தன் கைகளுள் வைத்துக்கொண்டு, தான் ஏதோ நல்லாட்சி வழங்குவது போல ஒரு பொய் பிம்பத்தை உருவாக்கி, அந்த மாய உலகத்தில் ஸ்டாலின் திளைத்து கொண்டிருப்பதை நான் அடிக்கடி சுட்டிக்காட்டி வந்துள்ளேன்.
அதனையும் மீறி சில ஊடகங்கள், இந்த விடியா ஆட்சியின் அவலங்களை மக்களிடத்தில் அம்பலபடுத்தினால், தன் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறையை ஏவி பொய் வழக்குகளால் முடக்க முயற்சிப்பது திமுகவிற்கே உரித்தான அராஜக பாசிச குணம்.

சவுக்கு மீடியாவின் ஊழியர்கள் மற்றும் வாசகர்கள் மீதான அரசியல் காழ்ப்புணர்ச்சி ஏவல்களை உடனடியாக கைவிட்டு, மக்களாட்சியின் நான்காம் தூணான ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகளின் சுதந்திரமான செயல்பாட்டை உறுதி செய்யுமாறு திமுக அரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன்” என பதிவிட்டுள்ளார்.