சேலத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நடைபயணம் செய்தவாறு பொதுமக்களிடையே திமுக வேட்பாளர் செல்வகணபதிக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்..
சேலம் பெத்தநாயக்கன்பாளையத்தில் இன்று மாலை நடைபெறும் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க ஸ்டாலின் கலந்து கொண்டு சேலம் மற்றும் கள்ளக்குறிச்சி வேட்பாளர்களை ஆதரித்து பேச உள்ளார்.

இதற்காக நேற்று சேலம் சென்ற முதலமைச்சர் இன்று காலை முதல் அக்ரகாரம், பெரிய கடைவீதியில் நடைபயணம் மேற்கொண்டவாறு திமுக வேட்பாளர் செல்வகணபதிக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது கடை வியாபாரிகள் வைத்த கோரிக்கைகளை கேட்டறிந்த அவர், செல்வகணபதி நாடாளுமன்ற உறுப்பினரானதும் நிச்சயம் உங்களது கோரிக்கைகளை நிறைவேற்றி தருவார் என உறுதி அளித்தார்.

அப்போது வாக்கு சேகரிப்பின் போது குழந்தைகள், பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் என ஏராளமானோர் முதலமைச்சருடன் செல்பி மற்றும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

அதை தொடர்ந்து தேர்தல் பிரச்சாரத்தின் இடையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வேட்பாளர் செல்வகணபதியுடன் சாலையோர தேநீர் கடையில் அமர்ந்து தேநீர் அருந்தினார். முதலமைச்சர் வருகையையொட்டி அந்த பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர்.