தெலங்கானாவில் பிரியாணிக்கு ஒரு ரூபாய் கூடுதலாக போன்பே மூலம் அனுப்பிய தகராறில் நண்பனை அடித்து கொலை செய்த நபரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் தெலங்கானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தெலங்கானா மாநிலம், வாரங்கல் மில்ஸ் காலனி கரீப்நகர் கோர்ரேகுண்டாவைச் சேர்ந்தவர் பிரேம்சாகர் (38). இவர் ஆட்டோ டிரைவர். காந்தி நகரை சேர்ந்தவர் ஜன்னுஅரவிந்த் (36). இவர்கள் இருவரும் நண்பர்கள். இந்த நிலையில், கடந்த 31 ஆம் தேதி இரவு காந்தி நகரில் உள்ள பிரியாணி கடைக்கு பிரேம்சாகர் சென்றுள்ளார்.

அங்கு சிக்கன் பிரியாணி பிளேட் ரூ.59-க்கு விற்கப்படுகிறது. அதனை அவர் பார்சல் வாங்கினார். அதற்கான பணத்தை போன்பே மூலம் அவர் செலுத்தினார். ரூ.59-க்கு பதிலாக ரூ.60 செலுத்தியதாக தெரிகிறது.
அப்போது அங்கு வந்த அவரது நண்பர் ஜன்னுஅரவிந்த், பிரேம்சாகரிடம் நீயே ஆட்டோ ஓட்டி பிழைக்கிறாய். எதற்காக 1 ரூபாய் கூடுதலாக கொடுக்கிறாய்?’ என கேட்டுள்ளார்.

அதற்கு பிரேம்சாகர், `நான் பிச்சைக்காரன் அல்ல, தெரிந்து தான் ரூ.1 கூடுதலாக கொடுத்தேன்’ என கூறினார். இதனால் இவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதில் ஆத்திரமடைந்த ஜன்னுஅரவிந்த், பிரேம்சாகரை காலால் எட்டி உதைத்தாராம்.
இதில் நிலைதடுமாறிய பிரேம்சாகர், அங்குள்ள ஒரு கல் மீது விழுந்தார். அதில் தலையில் காயம் ஏற்பட்டு அவர் சுயநினைவு இழந்தார். பின்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிறிது நேரத்தில் உயிரிழந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் மில்ஸ் காலனி போலீசார் கொலை வழக்காக மாற்றி ஜன்னுஅரவிந்தை நேற்று கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் தெலங்கானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.