புதுச்சேரி அடுத்த கிருமாம்பாக்கம் அருகே மருத்துவக்கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற நர்சிங் மாணவர்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி அடுத்த கிருமாம்பாக்கம் அருகே உள்ள மகாத்மா காந்தி சார்காசிமேடு சாலையில் மருத்துவக்கல்லூரி மாணவர்களுக்கு தொடர்ந்து கஞ்சா விற்பனை நடப்பதாக கிருமாம்பாக்கம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை அடுத்து கிருமாம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு சந்தேகப்படும் படி நின்று கொண்டிருந்த 4 பேரை பிடித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறவே, சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களின் சட்டை பையில் சோதனை செய்தனர். அதில், கஞ்சா பொட்டலங்கள் வைத்திருந்தது தெரியவந்தது.

இதை அடுத்து அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள், கடலூர் மாவட்டம், அடுத்த திருப்பாதிரிப்புலியூரை பகுதியை சேர்ந்த ரத்தீஷ் கண்ணா வயது (23) அதனை தொடர்ந்து, வன்னியர்பாளையம் மேட்டு தெரு பகுதியை சேர்ந்த ரேவந்த் வயது (24), தொடர்ந்து புதுப்பாளையம் ஆற்றங்கரை தெரு பகுதியை சேர்ந்த தனுஷ் வயது (19), தொடர்ந்து தரங்கம்பாடி தளச்சங்காடு பகுதியை சேர்ந்த சுமன் ராஜா வயது (19) என தெரியவந்தது.

மேலும், அதில் ரத்தீஷ் கண்ணா, ரேவந்த் ஆகியோர் பட்டப்படிப்பு முடித்தவர்கள். தனுஷ், சுமன் ராஜா கிருமப்பாக்கத்தில் உள்ள மருத்துவ கல்லூரியில் 3 ஆம் ஆண்டு நர்சிங் படிப்பு படித்து வருபவர்கள். அப்போது ரத்தீஷ் கண்ணா, ரேவந்த் ஆகியோர் புதுச்சேரி, கடலூரில் ஏற்கனவே கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்துள்ளனர்.

இவர்களுடன் தொடர்பு ஏற்பட்டதால் அவர்களிடம் இருந்து தனுஷ் கஞ்சா வாங்கி, கிருமாம்பாக்கத்தில் உள்ள மருத்துவ மாணவர்களுக்கு விற்று வந்துள்ளது விசாரணையில் தெரியவந்தது. இதை அடுத்து கஞ்சா வழக்கில் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

அப்போது அவர்களிடமிருந்து 360 கிராம் கஞ்சா பொட்டலங்களை கைப்பற்றினர். பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பின்பு காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.