விழுப்புரத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மோதிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் சிசிடிவி காட்சியில் பதிவாகி உள்ளது. இந்த வீடியோ சமுக வளைதளத்தில் வைரல்.
விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து கிராமப்புறங்களுக்கு செல்லும் அரசு மற்றும் தனியார் நகர பேருந்துகள், மினி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. விழுப்புரத்தை சுற்றியுள்ள தோகைபாடி, கப்பூர், மாம்பழப்பட்டு, அனந்தபுரம் உள்ளிட்ட மார்க்கங்களுக்கும் மற்ற கிராம பகுதிகளுக்கும் நகர பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று மாலை 5 மணி அளவில் பள்ளி, கல்லூரி விடப்பட்ட நிலையில் பேருந்து நிலையத்தில் மாணவ மாணவியரின் கூட்டம் காணப்பட்டது.

அதனை தொடர்ந்து நன்னாடு கிராமத்தை சேர்ந்த மாணவர் ஒருவர் பேருந்துக்காக காத்திருந்த போது, அருகில் இருந்த அரசு கல்லூரி மாணவரிடம் டைம் என்ன என்று கேட்டுள்ளார். அதற்கு கல்லூரி மாணவர், உனக்கு டைம் சொல்லவா நான் காத்திருக்கிறேன் என்று கூறி அவரிடம் தகராறு செய்துள்ளார். இதனால் அங்கிருந்த பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டு பள்ளி மாணவரை, கல்லூரி மாணவர்கள் சேர்ந்து தாக்கியதாக கூறப்படுகிறது.
இந்த தாக்குதலுக்கு உள்ளான மாணவர், அருகில் உள்ள தனது உறவினர், நண்பர்களை போன் செய்து அழைத்து அங்கு வர வைத்துள்ளார். அதை தொடர்ந்து தனது நண்பர்கள், உறவினர்களை அழைத்து சென்று தன்னை தாக்கிய கல்லூரி மாணவரை சூழ்ந்து கொண்டு சரமாரியாக ஓட, ஓட விரட்டி தாக்கியுள்ளனர். இதனை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பார்த்து அதிர்ச்சியடைந்து சென்று தடுத்தனர். ஆனால் போலீசார் என்றும் பொருட்படுத்தாமல் அவர்கள் முன்னிலையில் சரமாரியாக தாக்கி கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் அவர்களை விலக்கிய போலீசார் காயமடைந்த கல்லூரி மாணவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் சினிமாவை மிஞ்சிய பெரும் பரபரப்பான சூழல் ஏற்பட்ட நிலையில் கூட்டமாக நின்றிருந்த மாணவர்களை போலீசார் அப்புறப்படுத்தினர். இதை தொடர்ந்து, பள்ளி, கல்லூரி மாணவர்கள் மோதும் வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது. இது குறித்து மேற்கு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.