இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோவிற்கு ஆந்திரமாநிலம், அடுத்த ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் மட்டுமே ராக்கெட் ஏவுதளம் உள்ளது.
இந்தியாவின் பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி உள்ளிட்ட செயற்கைகோள்கள் மற்றும் உலக நாடுகளின் செயற்கை கோள்கள் இங்கிருந்து ஏவப்பட்டுள்ளன.

நாட்டின் இரண்டாவது ஏவுதளத்தை அமைப்பதற்காக பூமத்திய ரேகைக்கு மிக அருகில் அமைந்துள்ள தமிழ்நாட்டின் குலசேகரப்பட்டணத்தை இஸ்ரோ தேர்வு செய்து அதற்காக சுமார் 2 ஆயிரத்து 300 ஏக்கர் பரப்பிலான நிலம் கையகப்படுத்தப்பட்டது.
ஸ்ரீஹரிகோட்டா பூமத்திய ரேகை பகுதியிலிருந்து 13.72 டிகிரி வடக்கில் அமைந்துள்ளது. ஆனால், குலசேகரப்பட்டணம் பூமத்திய ரேகையிலிருந்து 8.36 டிகிரி வடக்கில் உள்ளது. எனவே, இங்கிருந்து ராக்கெட் ஏவும் போது அதிகளவில் எரிபொருள் மிச்சமாகும்.

தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி, பிப்ரவரி 28-ல் குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளத்திற்கான அடிக்கல் நாட்டினார்.
அப்போது அடிக்கல் நாட்டப்பட்ட கையோடு அங்கு இஸ்ரோ அமைத்துள்ள தற்காலிக கான்கிரீட் ஏவுதளத்தில் இருந்து சிறிய ரக ராக்கெட்டை விண்ணில் செலுத்தி சோதனை செய்தது.

குலசையில் இருந்து பிப்ரவரி 28 அன்று சரியாக பிற்பகல் 1.40 மணி அளவில் முதல் ராக்கெட்டான ரோகினி ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. அப்போது காற்றை அளவிடும் ஆர்எஸ்200 சவுண்டிங் கருவி வைத்து சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.
இந்த சிறிய ரக ராக்கெட் இந்திய பெருங்கடலின் குறிப்பிட்ட தூரம் வரை உள்ள காற்றின் வேகத்தை அறிந்து கொள்வதற்காக ஏவப்பட்டது. சோதனை முயற்சியாக அனுப்பப்பட்ட ராக்கெட் 100 கிலோமீட்டர் தூரம் பயணித்து பின்னர் கடலில் விழுந்தது.

ரோகினி ராக்கெட் ஏவப்படுவதையொட்டி மாவட்ட மக்களுக்கு ஆட்சியர் லட்சுமிபதி ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தார்.
அதில், அவர் கூறி இருந்ததாவது, துாத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம், குலசேகரப்பட்டணம் இந்திய விண்வெளி ஆய்வு மைய (இஸ்ரோ) ஏவுதள வளாகத்தில் இருந்து, உத்சேமாக 28.02.2024 முதல் 29.02.2024 வரை (காலை 09.30 மணி முதல் பிற்பகல் 02.00 மணி வரை) அட்ச தீரக்க ரேகைகளிலிருந்து

(Launch pad Coordinates: Latitude – 08° 22′ North, Longitude – 78° 02′ East) ஒரு ரோகினி ராக்கெட் (Rohini Sounding Rocket (RH-200)) ஏவுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக இந்திய விண்வெளி ஆய்வு மையம் (ஸ்ரீஹரிகோட்டா Satish Dhawan Space Centre, SHAR) தெரிவிக்கப்பட்டுள்ளது.
மணப்பாடு கலங்கரை விளக்கத்திற்கும், பெரியதாழை தூண்டில் பாலத்திற்கும் இடையிலான கடற்கரையிலிருந்து 10 கடல் மைல் (18 கிலோ மீட்டர்) வரை கடலுக்குள் விரிந்து கிடக்கும் பகுதிகள் ஆபத்தான பகுதியாக இந்திய விண்வெளி ஆய்வு மையத்தினால் (இஸ்ரோ) அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, 28.02.2024 முதல் 29.02.2024 (காலை 09.30 மணி முதல் மாலை 02.00 மணி வரை) மீனவர்கள் / பொதுமக்கள் சிறிய கப்பல்கள், மீன்பிடி படகுகள், மற்ற படகுகள், கட்டுமரம் வழியாக மேற்படி பகுதிக்குள் நுழைய வேண்டாம் என கேட்டுக் கொண்டிருந்தார்.