ரெட் பிக்ஸ் யூட்யூப் சேனலுக்கு சமீபத்தில் பேட்டி அளித்த சவுக்கு சங்கர் காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் பெண் காவல்துறையினர் குறித்து அவதூறாக கருத்துக்களை தெரிவித்தார். இது தொடர்பாக கோவையை சேர்ந்த காவலர் சுகன்யா சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் சவுக்கு சங்கர் மீது வழக்கு பதிவு செய்து கடந்த 4 ஆம் தேதி தேனி அருகே பழனி செட்டிப்பட்டி யில் வைத்து போலீசார் அவரை கைது செய்தனர். அத்துடன் அவரது காரில் கஞ்சாவையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து கோவை அழைத்து வரப்பட்ட அவர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே சவுக்கு சங்கரின் நேர்காணலை ஒளிபரப்பிய ரெட் பிக்ஸ் யூட்யூப் சேனல் தலைமை நிர்வாகி பெலிக்ஸ் ஜெரால்டு மீதும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்யக்கூடும் என்று தகவல்கள் வெளியாகின.

எனவே சவுக்கு சங்கர் வழக்கில் தன்னையும் காவல்துறை கைது செய்யகூடும் என்பதால் தனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்து நீதிபதி குமரேஷ் பாபு யூடியூப் சேனல்களை கட்டுப்படுத்துவதற்கான தகுதி நேரம் இது.
நேர்காணல் தர வருபவர்கள் அவதூறான கருத்துக்களை கூற தூண்டும் விதமான பேட்டி எடுப்பவர்களை முதலில் எதிரியாக சேர்க்க வேண்டும் என்று கருத்து தெரிவித்தார். மனு மீது ஒருவாரத்தில் பதிலளிக்க வேண்டும் என்று காவல்துறைக்கும் உத்தரவிடப்பட்டது.

இந்த நிலையில் ரெட் பிக்ஸ் யூடியூப் சேனல் ஆசிரியர் பெலிக்ஸ் ஜெரால்டு டெல்லியில் தமிழக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இதை தொடர்ந்து அவர் தமிழ்நாட்டிற்கு அழைத்து வரப்பட்டு போலீசாரால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின் சிறையில் அடைக்கப்படுவார் என்று தெரிகிறது.