ஒவ்வொரு ஆண்டும் பருவ மழை பெய்து வருவது வழக்கம். ஒவ்வொரு மழையும் நமக்கு ஒரு வரலாற்றுப் பாடத்தை கற்றுக் கொடுத்துக் கொண்டே தான் இருக்கிறது. ஆனால் அந்த வரலாற்றுப் பாடத்தை நாம் கற்றுக் கொள்வதே இல்லை. அதனால் தான் மழை பாதிப்புக்குள்ளாகிறோம் என்பது உண்மை. ஓரிரு நாட்கள் பெய்த கனமழை சென்னையை புரட்டிப்போட்டு விட்டது. உண்மைதான் அதற்கு நாம் தான் காரணம். இயற்கை நமக்கு வழி வகுத்து கொடுத்த முறைகளை நாம் சரியாகப் பின்பற்றாதது தான் இது போன்ற பேரிடருக்கு காரணம்.
தமிழ்நாட்டில் மொத்தம் 39,202 ஏரிகள் உள்ளன. இந்த ஏரிகள் விவசாயத்திற்கு மட்டும் பயன்படாமல் நம்முடைய குடிநீர் தேவைகளுக்கும் சேர்த்தே பயன்பட்டு வருகிறது. சென்னையை சுற்றி மட்டும் செங்குன்றம் ஏரி, புழல் ஏரி, செம்பரம்பாக்கம் ஏரி, செங்கல்பட்டு ஏரி, மதுராந்தகம் ஏரி, பூண்டி ஏரி, சோழவரம் ஏரி, பழவேற்காடு ஏரி, என எட்டு பெரிய ஏரிகள் உள்ளன இவற்றை முறையாக தூர்வாரி இருந்தால் இந்த மழை நீர் முழுவதும் ஏரிகள் உள்வாங்கி சிறந்த நீர்த்தேக்கங்களாக திகழ்ந்திருக்கும். அப்படி ஏரிகள் தண்ணீரை உள்வாங்கவில்லையா? என்றால் இல்லை உள்வாங்கி இருக்கிறது போதிய கொள்ளளவு ஏரியில் இல்லை காரணம் ஏரிகள் 20 ஆண்டுகளுக்கு மேலாக தூர்வாரப்படவில்லை இந்த ஏரிகள்.ஏரிகள் முழுவதும் அப்படியே இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை ஏரியை சுற்றி பல ஏக்கர் பரப்பளவு ஆக்கிரமிப்புகள் இருக்கிறது. அந்த ஆக்கிரமிப்பின் விளைவு தான் ஏரிகள் தண்ணீரை தேங்க வைக்க முடியாமல் அப்படியே வெளியேற்றி வருகிறது, இல்லையேல் கரையை உடைத்துக் கொண்டு வெளியேறுகிறது.
தற்போது சென்னையில் பெய்த மழை காரணமாக 50க்கும் மேற்பட்ட கார்கள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட காரணம் என்னவென்றால் பள்ளிக்கரணை ஏரி உடைப்பு தான். இந்தப் பள்ளிக்கரணை ஏரியின் ஒட்டுமொத்த பரப்பளவு தற்போது பத்து மடங்கு ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி இருப்பதன் காரணம் தான் இந்த ஏரி உடைப்பிற்கு காரணம். இதுவெல்லாம் மழை நமக்கு சொல்லிக் கொடுக்கின்ற வரலாற்றுப் பாடங்கள்.
மழை பெய்த உடனே தண்ணீரை வெளியேற்றுவதற்கு நாம் காட்டுகிற அவசரமும் அக்கறையும் தண்ணீரை சேமித்து வைப்பதற்கு நாம் காட்ட வில்லை என்பதுதான் இது போன்ற பேரிடர்களுக்கு காரணமாக அமைகிறது. தமிழகத்தை ஆளுகின்றவர்கள் யாராக இருந்தாலும் ஏரிகளை தூர் வாருங்கள் பேரிடர்களில் இருந்து நம்மை காப்பாற்றிக் கொள்ளலாம் இனியும் வரலாற்றுப் பாடங்களை ஏற்காவிட்டால், சென்னையில் மட்டுமல்ல தமிழகத்தில் எங்கு மழை பெய்தாலும் இதே நிலைதான் நீடிக்கும்.
ஆசிரியர் : ஜோதி நரசிம்மன்.
Leave a Reply
You must be logged in to post a comment.