கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அருகே குச்சிபாலயம் என்ற கிராமத்தில் லோட்டஸ் பவுண்டேஷன் என்ற பெயரில் தனியார் மது மறுவாழ்வு மற்றும் மனநல காப்பக மையம் செயல்பட்டு வருகிறது. இந்த தனியார் மறுவாழ்வு மையத்தில் சுமார் 24 நபர்கள் தங்கி மருத்துவம் பார்த்து வருகின்றனர்.
இந்த நிலையில் திருக்கோவிலூர் அருகே உள்ள சித்தாமூர் கிராமத்தை சேர்ந்த பொன்முடி என்பவரின் மகன் ராஜசேகரன் என்பவர், மது பழக்கத்திற்கு அடிமையாகி, இந்த தனியார் மையத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அங்கு சிகிச்சை பெற்று வந்த ராஜசேகரன் உடல்நிலை குறைபாடு ஏற்பட்டுள்ளதால், அவரை சிகிச்சைக்காக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்வதாக அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
மேலும் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிர் இழந்து விட்டதாகவும் அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கபட்டது. தகவலின் பேரில் திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு விரைந்து சென்ற ராஜசேகரனின் மனைவி,

அவரது உடலை ஆய்வு செய்த போது, ஆங்காங்கே அவரது உடலில் காயம் இருப்பதை கண்டு சந்தேகம் அடைந்து, தனது கணவர் அடித்து கொள்ளப்பட்டு உள்ளார் என்றும், இது குறித்து விசாரணை நடத்தும் படி மணலூர்பேட்டை காவல் நிலையத்திற்கு புகார் தெரிவித்தார்.
புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட மணலூர்பேட்டை போலீசார், ராஜசேகரன் உடலை உடற்கோர் ஆய்விற்கு உற்படுதினர். மேலும் உடற்கூர் ஆய்வின் முடிவில், ராஜசேகரன் உடம்பில் உள்ள காயங்கள் அவரை அடித்து துன்புறுத்தியதால் தான் ஏற்பட்டுள்ளது என்றும்,

அதன் காரணமாகவே தான் அவர் இறந்துள்ளார் என்று மருத்துவர்கள் சான்று அளித்த நிலையில், அந்த தனியார் காப்பகத்தில் சிகிச்சை பெற்று வந்த மற்ற 23 நபர்களை மருத்துவ அதிகாரிகள் மீட்டு, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர்களை மாற்றம் செய்துள்ளனர்.
மேலும் திருக்கோவிலூர் துணை காவல் கண்காணிப்பாளர் பூபாலன் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் முன்னிலையில் குச்சிபாளையம் கிராமத்தில் செயல்பட்டு வந்த லோட்டஸ் பவுண்டேஷன் என்ற தனியார் மது போதை மறு வாழ்வு மையத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக இந்த காப்பகத்தின் உரிமையாளர் காமராஜ் மற்றும் காப்பக ஊழியர்கள் இருவர் கைது செய்யபட்டு, போலீசாரால் விசாரணை மேற்கொள்ளபட்டு வருகின்றனர்.
போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த நபர் ஒருவர் அடித்து கொள்ளபட்டு இருக்கும் சம்பவம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.