மீட்டர் வட்டியை போல அபராதத்தோடு கட்டணம் கட்டச்சொல்லி மிரட்டும் பி.பி.ஜி கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து மாணவர்கள் இரண்டாவது நாளாக உள்ளிருப்பு போராட்டம்.
கோவை, சரவணம்பட்டி பகுதியில் பிபிஜி நர்சிங் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் 2023 – 2024 ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்றது. மாணவர் சேர்க்கையின் போது கல்வி கட்டணம் ரூ.1,20,000 என்றும், அதனை 4 தவணைகளாக செலுத்தலாம் எனக்கூறி மாணவர் சேர்க்கை நடைபெற்றது. இதில் மாணவர்கள் நடப்பாண்டு கட்டணமாக 1,20,000 -த்தில் முன்பணமாக ரூ.40,000 மட்டும் செலுத்தியுள்ளனர். அதனைத் தொடர்ந்து முதல் பருவ கட்டணத்தை செலுத்தாதால் கல்லூரி நிர்வாகம் பருவ கட்டணத்தை செலுத்தினால் மட்டுமே வகுப்புகளுக்கு வர வேண்டும் என எச்சரித்துள்ளனர். இதனால் 6 மாணவ, மாணவிகள் 4 நாட்களாக கல்லூரிக்கு வரவில்லை.

இந்நிலையில் மாணவி ஒருவரின் தந்தை கல்லூரி நிர்வாகத்தினரை சந்தித்து, இது குறித்து கேட்டபோது, கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் நிர்வாகத்தினர் முறையாக பதில் அளிக்காமல் செக்யூரிட்டி சிவலிங்கத்தை வரவழைத்து மாணவியின் தந்தையை தரக்குறைவாக பேசி வெளியேற்றியுள்ளனர். இத்தகவலறிந்த முதலாம் ஆண்டு படிக்கும் 100க்கும் மேற்பட்ட மாணவர்களும் அந்த 6 மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்து வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கல்லூரி பேராசிரியரையும், செக்யூரிட்டி சிவலிங்கம் ஆகியோரை பணி நீக்கம் செய்தால் மட்டுமே கலைந்து செல்வோம் என்று தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டத்தை தொடர்ந்தனர். அதனைத் தொடர்ந்து கல்லூரி நிர்வாகம் கல்லூரி பேராசிரியர், செக்யூரிட்டி சிவலிங்கத்தையும் தற்காலிக பணிநீக்கம் செய்வதாக உறுதியளித்துள்ளனர்.

மேலும் இன்று கல்லூரி பருவ கட்டணம் குறித்து கல்லூரி உரிமையாளர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்திக் கொள்ளலாம் என்று கூறியதை ஏற்றுக்கொண்டு மாணவர்கள் கலைந்து சென்றனர். இந்நிலையில் இன்று பேச்சு வார்த்தைக்கு கல்லூரிக்கு மாணவ, மாணவிகளை பேச்சு வார்த்தைக்கு அழைக்காமல் அலைக்கழித்ததுடன் பேச்சு வார்த்தை நடத்தாமல் போக்குகாட்டியுள்ளனர். இதனையடுத்து மாணவ மாணவிகள் அனைவரும். கல்லூரி வாயில் முன்பாக கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தரையில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து மாணவிகள் கூறும்போது, 1கல்லூரியில் அடிப்படை வசதி இல்லை, அதிக கட்டணம் வசூல், முதலாம் ஆண்டு மாணவர்கள் இரண்டாம் ஆண்டிற்கான கட்டணத்தை கட்டச்சொலி நிர்பந்தம் செய்வதாகவும் இரண்டாம் ஆண்டிற்கான கட்டணத்தை முதலாம் ஆண்டிலேயே கட்டினால் தான் தேர்வு எழுத அனுமதிப்பதாகவும், கட்டணம் கட்டத்தவறும் மாணவ மாணவிகளுக்கு நாள் ஒன்றிற்கு ரூ.50-300 வரை பைன் வசூலிப்பதாக மாணவர்கள் புகார் தெரிவித்தனர்.இது குறித்து தகவல் கேட்க வந்த மாற்று திறனாளி பெற்றோர் ஒருவரை கல்லூரி நிர்வாகத்தினர் மற்றும் பேராசிரியர்கள் கல்லூரி வாயில் காவலர்களை வைத்து தரக்குறைவாக பேசுவதாகவும் குற்றம் சாட்டினர். மேலும் இப்பிரச்சனைக்கு உரிய தீர்வு கிடைக்காத பட்சத்தில் தொடர்ந்து வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட இருப்பதாகவும் தெரிவித்தனர்.