பழனியில் ஆசைகாட்டி உல்லாசத்திற்கு அழைத்துச் சென்று ஆண் நண்பர்கள் மூலம் கத்தியை காட்டி கொள்ளையில் ஈடுபட்ட 2 பெண்கள் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து கார்கள், அரிவாள், கத்தி, செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், அருகே பழனி நகர் காவல் நிலையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரெட்டியார் சத்திரத்தை சேர்ந்த ரமேஷ் என்பவர் புகார் ஒன்றை அளித்திருந்தார்.

அதில் இரண்டு பெண்கள் தன்னை ஆசைகாட்டி உல்லாசத்திற்கு அழைத்து சென்றதாகவும், அங்கு பெண்களுடன் இருக்கும் போது மறைந்திருந்த ஆண் நண்பர்கள் புகைப்படம் வீடியோ எடுத்ததாகவும்,
பின்னர் தன்னிடம் இருந்த செல்போன், பணம் உள்ளிட்டவையை கத்தியை காட்டி மிரட்டி பறித்து கொண்டு தப்பி ஓடிவிட்டதாகவும் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதன் அடிப்படையில் டி.எஸ்.பி தனஜெயன் உத்தரவின் பேரில் காவல் ஆய்வாளர் மணிமாறன் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று அதிகாலை சண்முக நதி அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது சந்தேகத்திற்கு இடமாக இரண்டு கார்களில் வந்த 5 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது திண்டுக்கல்லை சேர்ந்த குணசேகரன் (40), நத்தத்தைச் சேர்ந்த பாலமுருகன் (37), திண்டுக்கல்லை சேர்ந்த லோகநாதன், சின்னாளபட்டியை சேர்ந்த பவித்ரா (24), சீலப்பாடியை சேர்ந்த காமாட்சி (25) என தெரியவந்தது.

மேலும் முன்னுக்கு பின் முரணாக பேசியதை அடுத்து, அவர்கள் மூவரையும் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். அதில் கடந்த சில நாட்கள் முன்பு தனியார் விடுதியில் ரமேஷ் என்பவரிடம் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது.
மேலும் கொடைக்கானலில் இருந்து நிசான் காரை திருடி வந்ததும் தெரியவந்தது. இதை அடுத்து அவர்களிடம் இருந்து இரண்டு கார்கள், அரிவாள், கத்தி மற்றும் 3 செல்போன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

அதை தொடர்ந்து 5 பேர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதேபோல் கொடைக்கானலிலும் சம்பவம் நடந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

பழனியில் ஆண்களை உல்லாசத்திற்கு அழைத்து, அதை மறைந்திருந்து வீடியோ பதிவு செய்து கொண்டு கத்தியை காட்டி ஆண் நண்பர்கள் மூலம் பணம், நகை மற்றும் செல்போன்களை பறித்துக் கொண்டு, இதை வெளியே சொன்னால் ஆபாச வீடியோக்களை வெளியிடுவோம் என மிரட்டி வரும் கும்பல் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.