மதுவில்லா தமிழகம் வேண்டும் என்பதே நமது விருப்பம் – ராமதாஸ்

0
18
ராமதாஸ்

ரமலான் திருநாளையொட்டி பாமக நிறுவனர் ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், வாழ்வில் நற்பண்புகளை வலியுறுத்தும் திருநாளான இரமலான் திருநாளை உலகெங்கும் கொண்டாடும் இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு எனது இதயங்கனிந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.‘‘நோன்பு பாவங்களிலிருந்து காக்கின்ற கேடயமாகும்; எனவே, நோன்பாளி கெட்ட பேச்சுகளைப் பேசவேண்டாம்; தேவையற்ற செயல்களில் ஈடுபட வேண்டாம்; யாரேனும் அவருடன் சண்டைக்கு வந்தால் அல்லது ஏசினால் ‘நான் நோன்பாளி!’ என்று இருமுறை கூறட்டும்; என் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அந்த இறைவன் மேல் ஆணையாக, நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை, அல்லாவிடம் கஸ்தூரியின் வாடையை விடச் சிறந்ததாகும். ‘எனக்காக நோன்பாளி தம் உணவையும், பானத்தையும், இச்சையையும்விட்டு விடுகிறார். அதற்கு நானே கூலி கொடுப்பேன். ஒரு நன்மை செய்வது அது போன்ற பத்து மடங்கு நன்மைகளை பெற்றுத் தரும்’’ என்று இறைதூதர் கூறியதாக இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் கூறுகிறார்கள்.

இரலான் திருநாள் என்பது ஒரு புனிதமான அனுபவம் ஆகும். இஸ்லாம் எத்தகைய நன்னெறிகளை கற்பிக்கிறதோ, அவை அனைத்தையும் இஸ்லாமியர்கள் கடைபிடிக்கும் காலம் தான் இரமலான் திருநாள் ஆகும். இஸ்லாம் கற்பிக்கும் நன்னெறிகளில் முதன்மையானது மதுவை விலக்குதல் ஆகும்.

ராமதாஸ்

மது அருந்துவதும், மதுவை உற்பத்தி செய்து விற்பதும் சாத்தானின் செயல்கள் என்று நன்னெறி நூலான திருக்குர் ஆன் கூறுகிறது. ஆனால், அறத்தையும் நன்னெறியையும் கடைபிடிக்க வேண்டிய ஆட்சியாளர்கள் கூட, இஸ்லாமியம் கூறும் நன்னெறிகளுக்கு மாறாக மதுவை விற்று தான் ஆட்சி நடத்துகின்றனர். தமிழ்நாட்டின் எந்த மூலையில் நின்று திரும்பிப் பார்த்தாலும் நான்கு திசைகளிலும் நான்கு மதுக்கடைகளைப் பார்க்க முடியும் என்ற அளவுக்கு நிலைமை மோசமடைந்திருக்கிறது. இந்த நிலை மாற வேண்டும்; மதுவில்லா தமிழகம் வேண்டும் என்பதே நமது விருப்பம்.

அந்த ஆசை நிறைவேற வேண்டும்; உலககெங்கும் வாழும் மக்களிடம் அன்பு, நல்லிணக்கம், சகிப்புத் தன்மை, சகோதரத்துவம், ஈகை உள்ளிட்ட நற்குணங்கள் பெருகவும், அமைதி, வளம், முன்னேற்றம், ஒற்றுமை, மகிழ்ச்சி ஆகியவை தழைக்கவும் உழைக்க இந்த புனிதமான நாளில் நாம் அனைவரும் உறுதியேற்போம் என்று குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here