அமாவாசையில் மகாளய அமாவாசை போல, தை அமாவாசை போல, ஆடி அமாவாசை போல, சித்திரை மாதத்தில் வரும் சித்ரா பவுர்ணமி ரொம்பவே மகத்துவம் வாய்ந்தது. இந்த நாளில் அம்பிகையை வழிபாடு செய்தால் திருமண வரம், மழலை வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
திருவண்ணாமலையில் சித்ரா பௌர்ணமி நாளில் கிரிவலம் செய்தால் ஆண்டு முழுவதும் கிரிவலம் செய்த பலனும் பேறும் கிடைக்கும் என்கிறது தலவரலாறு. சித்ரா பௌர்ணமியில் சித்தர் பெருமக்கள் அனைவரும் வெவ்வேறு ரூபங்களில் பூமிக்கு வந்து அருள்வார்கள் என்று அகத்தியர் நூல்கள் கூறுகின்றன.
திருவண்ணாமலையில் சித்திரை பெளர்ணமி 25 இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கிரிவலம் சென்றனர்.
திருவண்ணாமலை பிரசித்திபெற்ற அருணாச்சலேஸ்வரர் ஆலயத்தில் சித்திரை மாத பௌர்ணமியையொட்டி, செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் புதன்கிழமை அதிகாலை வரை 25இலட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் சென்றனர் பக்தர்களின் கட்டுக்கடங்காத கூட்டத்தால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
திருவண்ணாமலை நகரைச் சுற்றியுள்ள 9 சாலைகளில் 11 தற்காலிகப் பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு இருந்தபோதிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் திருவண்ணமலை நகரமே பக்தர்கள் வெள்ளத்தில் மூழ்கியது.
கடும் வெயிலுக்கு மத்தியில், பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மாவட்ட நிர்வாகம் மற்றும் நகராட்சி நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டிருந்தது.
ஒவ்வொரு மாதத்தில் வரும் பௌர்ணமியும் ஒவ்வொரு நட்சத்திரத்தில் தோன்றும். அந்த வகையில் சித்திரை மாதம் வரும் பௌர்ணமி சித்திரை நட்சத்திரத்தில் தோன்றுகிறது. இந்த நன்னாளில் சிவபெருமான் மற்றும் அம்பாள், முருகன் உள்ளிட்ட தெய்வங்களை வழிபடுவது சிறப்பு
இந்த நிலையில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் கிரிவலம் போக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் ஏப்ரல் 22,23 ஆகிய இரண்டு நாட்களும் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது.