முன்னாள் அமைச்சர் பொன்முடி மீது பதிவு செய்யப்பட்ட செம்மண் குவாரி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு வழக்கு ஆவணங்களை வழங்க மறுத்த விழுப்புரம் சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2006 – 2011-ம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சியில் உயர் கல்வி மற்றும் கனிம வளங்கள், சுரங்கத் துறை அமைச்சராக க.பொன்முடி பதவி வகித்த போது, விழுப்புரம் மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகளவில் செம்மண் வெட்டி எடுத்ததன் மூலம் அரசுக்கு 28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்து 600 ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக புகார் எழுந்தது.

இந்த புகாரின் அடிப்படையில் பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி, ராஜமகேந்திரன், வி.ஜெயசந்திரன் உள்ளிட்டோர் மீது 2012-ல் விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறை வழக்கு பதிவு செய்தது.
இந்த வழக்கு விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் உள்ள எம்.பி, எம்.எல்.ஏ மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்தநிலையில் சிறப்பு நீதிமன்றம் கடந்த மாதம் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஜெயசந்திரன் கோரிய சில ஆவணங்களை விசாரணைக்கு வழங்க முடியாது என்று உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து ஜெயசந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அதில் தன்னிடம் வழக்கு தொடர்பாக 2011 மற்றும் 2012 ஆகிய ஆண்டுகளில் விசாரணை அதிகாரி கேட்ட விவரங்களுக்கு பதில் அளித்து உள்ளதாகவும், அதனால் அந்த ஆவணங்களை சாட்சி விசாரணைக்கு வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அபுடு குமார் ராஜரத்தினம் ஆஜராகி, கடந்த 2011 மற்றும் 2012-ம் ஆண்டுகளில் வழக்கு தொடர்பாக உரிய பதில் மனுதாரர் தரப்பில் இருந்து தரப்பட்டது.

அந்த பதிலை முறையாக பரிசீலனை செய்திருந்தால் வழக்கு பதிவு செய்யதிருக்க முடியாத நிலை ஏற்பட்டு இருக்கும். எனவே, மனுதாரர் தரப்பு சாட்சி விசாரணையின் போது அதுகுறித்து குறுக்கு விசாரணை தேவை.
எனவே, ஆவணங்களை தர மறுத்த விசாரணை நீதிமன்றம் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று வாதிட்டார். அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, வரும் 18-ம் தேதி சாட்சிகள் விசாரணை நடக்க உள்ளது.
அந்த விசாரணையை நடத்தும் வகையில் மனுதரார் கோரிய ஆவணங்களை சிறப்பு நீதிமன்றம் வழங்க வேண்டும். அப்போது ஆவணங்களை வழங்க மறுத்த சிறப்பு நீதிமன்ற உத்தரவு ரத்து செய்யப்படுகிறது என்று சொல்லப்படுகிறது.