கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட நெல்லிமலை வனப்பகுதியையொட்டி சமயபுரம் என்னும் சிறு கிராமம் அமைந்துள்ளது.
மேட்டுப்பாளையத்தில் இருந்து வனபத்ரகாளியம்மன் கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள சமயபுரம் சாலையில் போக்குவரத்து அதிகமாக காணப்படுவதோடு வன விலங்குகள் கடந்து செல்லும் பாதையாகவும் விளங்கி வருகிறது.
நெல்லிமலை வனப்பகுதியில் பாகுபலி காட்டு யானை, மான், காட்டுப்பன்றிகள் மற்றும் பிற வனவிலங்குகளின் நடமாட்டம் காணப்படுகிறது. இந்த நிலையில் உணவு மற்றும் நீர்நிலைகளைத் தேடி இரவு நேரத்தில் நெல்லிமலை வனப்பகுதியில் இருந்து வெளியேறும் பாகுபலி காட்டு யானை சமயபுரம் சாலையை கடந்து,

குடியிருப்புகள் வழியாக கல்லார் வனப்பகுதிக்கு செல்வதும் மீண்டும் கல்லாறு வனப்பகுதியில் இருந்து வெளியேறி சமயபுரம் சாலையை கடந்து நெல்லி மலை வனப்பகுதிக்கு செல்வதையும் வழக்கமாக கொண்டுள்ளது.
மேலும் கடந்த சில தினங்களாக சமயபுரம் பகுதியில் பாகுபலி காட்டு யானையின் நடமாட்டமும் அதிகரித்து காணப்படுகிறது.
இந்த நிலையில் பாகுபலி காட்டு யானை கல்லாறு வனப்பகுதிக்குள் செல்லும் வழித்தடம் தனியார் ஒருவருக்கு சொந்தமான தோட்டத்தில் அமைந்துள்ளது. விவசாயி தனது தோட்டத்தில் வாழை பயிரிட்டு வனவிலங்குகள் தோட்டத்தில் புகுந்து விடுவதை தடுக்க தோட்டத்தைச் சுற்றிலும் சூரிய மின்வேலி அமைக்கப்பட்டது.

இதன் காரணமாக நெல்லித்துறை வனப்பகுதியில் இருந்து வெளியேறும் பாகுபலி காட்டு யானை கல்லாறு வனப்பகுதிக்குள் செல்ல முடியாமல் தவித்தது. மாற்று வழியையும் தேடி அந்த வழியாக பாகுபலி காட்டு யானை சென்றும் வந்தும் கொண்டிருந்தது.
இந்த நிலையில் பாகுபலி காட்டு யானை நேற்றிரவு சமயபுரம் அருகே உள்ள வெல்ஸ்புரம் ஊருக்குள் புகுந்து கம்பீரமாக உலா வந்தது.
வனப்பகுதியில் இருந்து வெளியேறிய பாகுபலி யானை வெல்ஸ் புரம் வழியாக குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் உலா வந்த காட்சி அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது.

இந்த சிசிடிவி காட்சிகள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. பாகுபலி காட்டு யானை பணப்பகுதியில் இருந்து வெளியேறும் காலங்களில் வனத்துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போதும் இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும்.
பாகுபலி காட்டு யானை செல்லும் வழித்தடத்தில் இடையூறு ஏற்பட்டதால் ஊருக்குள் புகுந்து வரும் பாகுபலி காட்டு யானையால் மனித வனவிலங்குகள் மோதல் ஏற்படும் அபாய சூழ்நிலை காணப்படுவதாக அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்.