கோவை ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் கொள்ளையடித்த விஜய் என்ற நபரை , இரு வாரங்களுக்கு பின்னர் தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 400 கிராம் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம், காந்திபுரம் 100 அடி வீதியில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் கடந்த 28 ம் தேதி 4.8 கிலோ (575 சவரன்) தங்கம், வைரம், பிளாட்டினம் உள்ளிட்ட நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. நகைக் கடைக்குள் இருந்த இரண்டு அடி இடைவெளியை பயன்படுத்தி, இந்த கொள்ளை சம்பவமானது நடைபெற்று இருந்தது. இதுகுறித்து விசாரிக்க ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்றது. இந்த கொள்ளை சம்பவத்தில் தர்மபுரியை சேர்ந்த விஜய் என்பவர் ஈடுபட்டு இருப்பதும், அவர் சமீபகாலமாக, பொள்ளாச்சி ஆனைமலை பகுதியில் தங்கி இருப்பதும் தெரியவந்தது. இந்தக் கொள்ளை சம்பவத்திற்கு விஜய்யின் மனைவி நர்மதா மற்றும் அவரது மாமியார் யோகராணி ஆகியோர் உடந்தையாக இருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து விஜய்யின் மனைவி நர்மதாவிடமிருந்து நவம்பர் 30 ம் தேதி 3.2 கிலோ தங்க நகைகளை பறிமுதல் செய்த போலீசார் நர்மதாவை கைது செய்தனர்.

இதனைத் தொடர்ந்து தனிப்படை போலீசார் தர்மபுரி மாவட்டம், தும்பலஹள்ளியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் இருந்த விஜய்யின் மாமியார் யோகராணியை கைது செய்தனர். அவரிடம் இருந்து 1.35 கிலோ தங்க நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். நகைகளை குப்பைத் தொட்டியிலும், சாலை ஓரத்திலும் புதைத்து வைத்திருந்த நிலையில் அவற்றை மீட்டனர். இந்நிலையில் கடந்த 5 ஆம் தேதி தர்மபுரி மாவட்டம், தேவரெட்டியூரில் உள்ள தனது இல்லத்திற்கு வந்த விஜய் வீட்டில் 38 கிராம் நகையை வைத்துவிட்டு சென்றதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து காவல்துறையினர் விஜய்யின் தந்தை முனிரத்தினத்திடம் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் 6 ஆம் தேதி இரவு விஜய்யின் தந்தை முனிரத்தினம் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கோவை, ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளில் பெரும்பாலானவை மீட்கப்பட்ட நிலையில் விஜய் தொடர்ச்சியாக தலைமறைவாக இருந்து வந்தார். ஐந்து தனிப்படை போலீசாரும் தொடர்ச்சியாக பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். இந்நிலையில் ஆந்திர மாநிலம் காளகஸ்தி பகுதியில், ஐயப்பன் கோவிலுக்கு மாலை அணிந்த வேடத்தில் விஜய் சுற்றி திரிவதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து போலீசார் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி இருந்த நிலையில், காலகஸ்தியில் இருந்து சென்னை வரும் வழியில் விஜயை தனிப்படை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட விஜய் தற்பொழுது தனிப்படை போலீசாரால் கோவை அழைத்து வரப்படுகிறார். விஜய்யிடம் இருந்து 400 கிராம் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளது. இந்த கொள்ளை சம்பவம் நடைபெற்று 12 நாட்களுக்குப் பிறகு கொள்ளையன் விஜய் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கொள்ளை சம்பவத்தில் முக்கிய நபரான விஜய் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், நகைகடையில் இருக்கும் இடைவெளி குறித்து அவருக்கு தகவல் சொன்ன நபர் யார் ? இதன் பின்னணியில் உள்ள நபர்கள் யார்? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு விடை காணும் பணியில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.