கோவை அன்னூர் காவல் நிலையத்தில் பாரம்பரிய உடை உடுத்தி, பானையில் புத்தரிசி இட்டு தமிழர் திருநாளாம் பொங்கலை கொண்டாடி போலீசார் மகிழ்ந்தனர்.
தமிழர்கள் பல விழாக்களைக் கொண்டாடினாலும், தை முதல் நாளன்று கொண்டாடப்படும் தைப் பொங்கல் தான், தமிழர்களின் தனிப்பெரும் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. இது தமிழர்களின் பாரம்பரிய, பண்பாட்டு விழாவாகும். தமிழர்கள், நன்றி செலுத்துவதில் தன்னிகரற்றவர்கள். உழைப்பாளிகளாகிய அவர்கள் இயற்கைக்கும், பிற உயிர்களுக்கும் நன்றி செலுத்துவதற்காக வெகு விமரிசையாகக் கொண்டாடி வருகின்றனர்.

தமிழர்கள், தோன்றிய காலம் முதல், இயற்கையை வழிபட்டு, வணங்கி தாங்கள் வாழ்வதற்கு வளங்களைக் கொடுப்பதால் மகிழ்ச்சியுடன் தைப் பொங்கலைக் கொண்டாடுகின்றனர். சங்க காலத்திலேயே, பொங்கல் நோன்பு இருந்ததற்கும் ஆதாரங்கள் இருக்கின்றன. சங்க காலத்தில், விவசாயமே, மக்களின் தொழிலாக இருந்தது. மண்ணை நம்பியே மக்களுக்கு மும்மாரி மழை தேவை. மழை பெய்தால், பயிர் செழிக்கும். நாடு கொழிக்கும்.

தமிழர்களின் தைப்பொங்கல் திருநாளன்று புத்தாடை அணிந்து தங்களது வீடுகளின் முன் புதுப்பானையில் புத்தரிசியிட்டு பொங்கல் பொங்கி வரும் போது பொங்கலோ பொங்கல் என குலவையிட்டு சப்தமிட்டு கொண்டாடுவது தமிழர்களின் பாரம்பரியம். அந்த வகையில் கோவை மாவட்டம், அன்னூர் காவல் நிலையத்தில் இன்று பொங்கல் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. எல்லா தினங்களும் காவலர்கள் தங்களது வழக்கமான காக்கி சீருடையை அணியாமல் கொண்டாட முடிவு செய்தனர்.

அப்போது தங்களது வீடுகளில் கொண்டாடுவது போல் பாரம்பரிய முறையில் ஆண் போலீசார் வேட்டி, சட்டை அணிந்தும், பெண் போலீசார் சேலை அணிந்தும் கலந்து கொண்டு பொங்கல் பண்டிகை கொண்டாடினர். அப்போதுஆண்கள் இளம் சிவப்பு நிறத்தில் சட்டையும், வெள்ளை நிற வேட்டியும் அணிந்திருந்தனர். காவல்நிலைய வளாகத்தில் காவலர்கள் அனைவரும் ஒன்றிணைந்து புதுப்பானையில் பொங்கலிட்டு அங்குள்ள விநாயகர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தினர்.

இதனை தொடர்ந்து பாரம்பரிய மிக்க குதிரை வண்டியில் அவர்கள் பயணம் செய்தும், குதிரைகளுக்கு உணவு வழங்கியும் மகிழ்ந்தனர். இதனை தொடர்ந்து காவலர்களுக்கு மியூசிக் சேர், கயிறு இழுத்தல், உறியடித்தல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னதாக ஜமாப் இசைக்கு ஏற்ப குதிரை நடனமாடியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.