கோவை மாவட்டம், மதுக்கரை அடுத்த பாலத்துறை பகுதியை சேர்ந்த மகாலட்சுமி. இவர் சென்னையில் ஐடி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். கடந்த சில தினங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த நிலையில் செவ்வாய் இரவு தனியார் ஆம்னி பேருந்து மூலம் கோவை திரும்பியுள்ளார்.
பேருந்தில் கீழ் படுக்கையில் பயணம் செய்த மகாலட்சுமி கோவை காந்திபுரம் பகுதியில் நேற்று காலை பேருந்து நின்ற பிறகும் இறங்கவில்லை.

இறுதியாக பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் அவரிடம் காந்திபுரம் வந்த தகவலை கூற சென்ற போது அவர் எழும்பாததால் சந்தேகமடைந்த அவர்கள், 108 ஆம்புலன்சிற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

பின்னர் அங்கு வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மகாலட்சுமியை பரிசோதித்த போது, அவர் ஏற்கனவே உயிரிழந்தது என்பது தெரியவந்துள்ளது. பின்னர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காட்டூர் காவல்நிலைய போலீசார் ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் விசாரணை நடத்தினர். பின்னர் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அப்போது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.