கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் மெத்தனால் கலந்த விஷச்சாராயம் குடித்தவர்களில் இதுவரை 52 பேர் உயிரிழந்து உள்ளனர்.
இவர்களுக்கு விஷச்சாராயம் விற்ற கன்னுக்குட்டி (எ) கோவிந்தராஜ், அவருடைய மனைவி விஜயா, சகோதரர் தாமோதரன் ஆகியோர் மீது 328, 304, 4(1i), 4(1a) ஆகிய நான்கு பிரிவுகளில் வழக்குப்பதிவு சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.
பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜூலை 5 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். சிபிசிஐடி போலீசார் நடத்திய விசாரணையில்;- மெத்தனால் கலந்த சாராயத்தை சின்னதுரை என்ற வியாபாரியிடம் இருந்து கன்னுக்குடி வாங்கியது தெரியவந்தது.

இதை அடுத்து பிரபல சாராய வியாபாரியான சின்னதுரையை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், மெத்தனாலை மொத்தமாக சப்ளை செய்யும் வியாபாரியான புதுச்சேரி மடுகரையைச் சேர்ந்த மாதேஷ்,
சங்கராபுரம் ஜோசப் ராஜா, புதுச்சேரியைச் சேர்ந்த சாராய வியாபாரி ராமர் மகன் முத்து ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கெட்டுப்போன மெத்தானால் என தெரிந்தும்,

அதை விற்றதால் மனித உயிர்கள் பறிபோன கொடூரம் நடந்துள்ளதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுகுறித்து சிபிசிஐடி போலீசார் கூறியதாவது:- மெத்தனால் மொத்த வியாபாரியான புதுச்சேரி மடுகரை மாதேஷ் தனது கூட்டாளிகளான ஜோசப் ராஜா,
முத்து உள்ளிட்டோருடன் அவ்வப்போது ஆந்திரா சென்று அங்குள்ள ரசாயன தொழிற்சாலையில் இருந்து மெத்தனாலை வாங்கி வந்து சப்ளை செய்து வருகிறார். ஆந்திராவில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் இருந்து கெட்டுப்போன மெத்தனாலை மாதேஷ் வாங்கி வந்து உள்ளார்.
இதை ஜோசப் ராஜாவிடம் கொடுத்து பிரபல சாராய வியாபாரியான சின்னதுரையிடம் விற்று உள்ளார்.

அவர் கெட்டுப்போன மெத்தனாலை, கடந்த 17 ஆம் தேதி கள்ளக்குறிச்சி அடுத்த சூலாங்குறிச்சி பகுதிக்கு கோவிந்தராஜன் (எ) கன்னுக்குட்டியை வரவழைத்து 60 லிட்டர் (4டியூப்), 30 லிட்டர் (3டியூப்) 3 சிறிய பாக்கெட் விஷசாராயத்தை முன்பணம் வாங்கி விற்றுள்ளார்.
கன்னுக்குட்டி சாராயம் குடிக்காதவர் என்பதால், அதை வாங்கி, தனது தம்பி தாமோதரனிடம் அதை கொடுத்து குடித்து பார்க்குமாறு கூறி உள்ளார். அவர் நக்கி பார்த்து விட்டு கெட்டுபோய் இருக்கு என்று கூறி உள்ளார்.
ஆனால் சின்னதுரை, உயர்ரக சரக்கு எனக்கூறி விற்குமாறு கூறவே அதை உடனே சாராயத்தில் கலந்து மறுநாள் கன்னுக்குடி விற்று உள்ளார். அது குட்டித்துதான் இவ்வளவு உயிர்கள் பறிபோய் உள்ளது. மெத்தனாலை ஆந்திராவில் இருந்து வாங்கி வரும் மாதேஷ், அதை ரயில் மூலமாக சென்னை கொண்டு வந்து,

அங்கிருந்து புதுச்சேரி மற்றும் சங்கராபுரம் பகுதிக்கு எடுத்துச் சென்று சப்ளை செய்து உள்ளார். இவ்வாறு சிபிசிஐடி போலீசார் தெரிவித்தனர். பிடிபட்ட சின்னதுரை, கோவிந்தராஜன் தரப்பிடம் இருந்து கைப்பற்றப்பட்ட கெட்டுப்போன மெத்தனால் கலந்த ரசாயன டியூப்களை பரிசோதனைக்காக தடயவியல் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
எந்த நிறுவனத்திடம் இருந்து இந்த மெத்தனால் வாங்கப்பட்டது, மேலும் யார், யாருக்கு இதில் தொடர்பு உள்ளது என 4 பேரிடமும் சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.