ஒரே குற்றத்திற்கு இரு தரப்பினர் புகார் அளித்தால் காவல்துறை எவ்வாறு கையாள வேண்டும் ? வழிமுறைகளை வகுத்துத்தந்த உயர் நீதிமன்றம் .!

1 Min Read

ஒரே பிரச்னை தொடர்பாக இரு தரப்பிலும் புகார்கள் அளிக்கப்பட்டால் அதை எப்படி கையாளுவது என்பது குறித்து சென்னை உயர் நீதிமன்ற 3 நீதிபதிகள் அமர்வு, விதிமுறைகளை வகுத்து உத்தரவிட்டுள்ளது.

- Advertisement -
Ad imageAd image
சென்னை உயர் நீதிமன்றம்

ஒரு பிரச்னை தொடர்பாக இரு தரப்பும் மாறி மாறி பரஸ்பரம் புகார் கொடுத்தால் அதனை காவல்துறையினரும், நீதிமன்றமும் எப்படி கையாள வேண்டும் என்பது குறித்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜெயச்சந்திரன், நிர்மல்குமார் மற்றும் ஆனந்த் வெங்கடேஷ் ஆகிய மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு, ஒரு சம்பவம் தொடர்பாக இரு தரப்பினரும் புகார் கொடுத்தால், அதை கவனமாக கையாள வேண்டும் எனவும், பாரபட்சம் காட்டாமல் இரு தரப்பு புகார் மீதும் விசாரணை நடத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

எதிர் புகார் மீதும் விசாரணை நடத்த வேண்டியது விசாரணை அதிகாரியின் கடமை எனவும், விசாரணை நடத்த மறுத்தால் உயர் அதிகாரியிடம் புகார் தெரிவிக்கலாம் எனவும், சம்பந்தப்பட்ட மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து விசாரணைக்கு உத்தரவு பெறலாம் எனவும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெளிவுபடுத்தியுள்ளனர்.

புகார் மற்றும் எதிர்புகார்கள் மீது விசாரணையை முடிந்த பிறகே, முதல் புகார் மீது இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும், இரண்டு புகார்களில் ஒரு புகாரில் உண்மை இல்லை என்று விசாரணையில் தெரியவந்தால் அதை முடித்துவைக்க வேண்டும் என்றும் இருதரப்பு புகார் மீது நடத்திய விசாரணையில், உண்மையான குற்றவாளி யார் என்று தெரியவில்லை என்றால், இரு புகார்கள் மீதும் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

இரு இறுதி அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டால், அவற்றை மாஜிஸ்திரேட் நீதிமன்றங்கள் கவனமாக ஆய்வு செய்ய வேண்டும் எனவும், இரு வழக்குகளையும் ஒரே நீதிமன்றம் தான் விசாரணை செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Share This Article
Leave a review