திருவள்ளூர் மாவட்டம், அருகே கும்மிடிப்பூண்டி பாட்டாளி மக்கள் கட்சியின் நகரச் செயலாளராக பொறுப்பு வகித்து வருபவர் இளஞ்செல்வம் (48). இவரது மனைவி ஜோதி (45).
அப்போது நடந்து முடிந்த பேரூராட்சி கவுன்சிலர் தேர்தலில் 11-வது வார்டில் பாமக கட்சியின் வேட்பாளராக மாம்பழம் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.

இந்த நிலையில் கும்மிடிப்பூண்டி பாமக நகர செயலாளர் இளஞ்செல்வத்தின் வீட்டின் அருகே முருகன் என்பவருக்கு சொந்தமான சுமார் 1 கோடி ரூபாய் மதிப்பிலான 10 சென்ட் நிலத்தை, இளஞ்செல்வம் தனது மனைவி ஜோதி மற்றும் ஜோதியின் சிறிய தகப்பனார் இராக்கம் பாளையத்தை சேர்ந்த பிரதாபன் என்பவரின் உதவியுடன் அபகரிக்க திட்டமிட்டுள்ளார்.

அதன்படி பிரதாபனின் பெயரை ஆதார் கார்டில் முருகன் என தத்ருபமாக மாற்றி கும்மிடிப்பூண்டி பத்திரப்பதிவு அலுவலகத்தில் போலியாக தயார் செய்யப்பட்ட ஆவணங்களுடன் பத்திரப்பதிவு அலுவலரின் உதவியுடன் கடந்த ஜனவரி 19 ஆம் தேதி பத்திரப்பதிவு செய்துள்ளார்.

இதை அறிந்த நில உரிமையாளர் முருகனின் உறவினர் ஏழுமலை அப்போதைய திருவள்ளூர் மாவட்ட கண்காணிப்பாளர் ஷீபாஸ் கல்யாணிடம் புகார் தெரிவித்துள்ளார்.

அதன் அடிப்படையில் 4 ஆம் தேதி நடைபெற்ற கடைசி விசாரணையில் போலி ஆதார் அட்டை தயார் செய்து, நிலத்தை மோசடி செய்தது உறுதியானது.

அதன் அடிப்படையில் கும்மிடிப்பூண்டி பாமக நகர செயலாளர் இளஞ்செல்வத்தை அதிரடியாக கைது செய்த திருவள்ளூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கும்மிடிப்பூண்டி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் இதற்கு உடந்தையாக இருந்த இளஞ்செல்வத்தின் மனைவி ஜோதி மற்றும் ஆள் மாறட்டும் செய்த பிரதாபன் ஆகியோரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.