இஸ்ரேல் காசா இடையேயான மோதல் பல மாதங்களாகத் தொடரும் நிலையில், இப்போது அங்கே நிலைமை கையை விட்டுப் போகும் சூழல் உருவாகியுள்ளது. இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்.
இஸ்ரேல் ஹமாஸ் இடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கிய போர் இன்னும் நிறைவடையவில்லை. காசா பகுதிக்குள் புகுந்து இஸ்ரேல் மிகக் கடுமையாகத் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இஸ்ரேலின் திட்டம் குறித்து வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெற்கு காசாவில் அமைந்துள்ள முக்கிய நகரான ரஃபாவில் உள்ளே நுழைந்து தாக்குதல் நடத்த இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது. ரஃபா அதிக மக்கள் தொகையைக் கொண்ட நகரம் என்பதால் இது பேரழிவை ஏற்படுத்தலாம் எனப் பலரும் எச்சரித்துள்ளனர்.
இருப்பினும், தாக்குதல் திட்டத்தில் பின்வாங்கப் போவது இல்லை என்று தெரிவித்துள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அதேநேரம் பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேறத் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

இந்தப் போரில் வெற்றி தாங்கள் தொட்டுவிடும் தூரத்தில் தான் இருப்பதாகத் தெரிவித்த நெதன்யாகு, நிச்சயம் வெல்லப் போகிறோம். ஹமாஸ் படையை முழுமையாக அழிக்க வேண்டும் என்பதே தங்கள் இலக்கு என்ற நெதன்யாகு, ரஃபாவில் ஹமாஸ் படையின் கோட்டை இருப்பதாகவும் எஞ்சியிருக்கும் அந்த பயங்கரவாத வீரர்களைக் குறிவைத்து அழிப்பதே தங்கள் கருத்து என்றும் அவர் கூறினார்.
இதற்கிடையே ஹமாஸ் படை இதற்குப் பதிலடி கொடுத்துள்ளது. ரஃபாவில் பல லட்சம் பாலஸ்தீனியர்கள் வசிப்பதாக தெரிவித்துள்ள ஹமாஸ் படை, இஸ்ரேலிய தாக்குதல் நடத்தினால் தங்களிடம் உள்ள பணயக்கைதிகளை விடுவிப்பது குறித்த பேச்சுவார்த்தை பாதிக்கப்படும் என்று கடுமையாகச் சாடியுள்ளது.

இஸ்ரேல் முதலில் வடக்கு காசாவில் தாக்குதலை நடத்திய நிலையில், தெற்கு காசாவில் உள்ள ரஃபாவுக்கு தான் வந்தனர். காசாவில் வசிக்கும் 23 லட்சம் மக்கள்தொகையில் சரி பாதிக்கும் மேலானவர்கள் ரஃபாவில் தான் இருப்பதாகக் கூறப்படுகிறது.
ஏற்கனவே உணவு, தண்ணீர் மற்றும் மருத்துவப் பொருட்களுக்குப் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளதாக ஹமாஸ் கூறுகிறது. இதனால் அங்கே மிகக் கடுமையான மனிதாபிமான நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது. இஸ்ரேலின் இந்த நடவடிக்கை சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்ரேலின் முக்கிய நட்பு நாடுகளான அமெரிக்கா உட்படப் பல வெளிநாடுகள் ரஃபா மீதான தாக்குதல் திட்டம் குறித்து விமர்சித்துள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார், ஓமன் மற்றும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (ஓஐசி) ஆகியவை ரஃபா தாக்குதல் திட்டம் குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளது.
அங்கே இனப்படுகொலை நடப்பதாகவும் இதை உடனடியாக தடுக்க வேண்டும் என்றும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அதேபோல சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அமீரக நாடுகளும் ரஃபா மீது தாக்குதல் நடத்தக் கூடாது.

இது தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அவசர கூட்டம் கூட்டப்பட வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளது. இஸ்ரேல் நாட்டிலும் கூட நெதன்யாகு நடவடிக்கைக்கு முழு ஆதரவு இல்லை என்றே சொல்ல வேண்டும்.
ஹமாஸ் தாக்குதல் விவகாரத்தை இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கையாண்டது மற்றும் முன்கூட்டியே தேர்தலுக்கு அழைப்பு விடுத்தது குறித்து அங்கு இரு வேறு கருத்துகளே நிலவுகிறது. ரஃபாவிற்குள் தாக்குதல் நடத்தினார். அவர்களிடம் உள்ள இஸ்ரேல் பணய கைதிகளை விடுவிக்கவே முடியாத சூழல் ஏற்படும்.

ராணுவ நடவடிக்கையால் பணய கைதிகளின் உயிர் போகும் சூழலும் ஏற்படலாம் எனக் கவலை தெரிவித்துள்ளனர். அதேநேரம் இந்த விவகாரம் தொடர்பாக முக்கிய அண்டை நாடுகளில் ஒன்றான எகிப்து கடுமையான அதிருப்தி தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் வீரர்கள் காசா எல்லை நகரமான ரஃபாவிற்குள் நுழைந்தால் இஸ்ரேலுடனான 50 ஆண்டுக்கால சமாதான கேம்ப் டேவிட் உடன்படிக்கையை ரத்து செய்துவிடுவோம் என்று எகிப்து மிரட்டல் விடுக்கும் தொனியில் பேசியுள்ளது. மேலும், எகிப்து மற்றும் காசா இடையேயான எல்லை பாதுகாக்கப்பட்ட ஒன்றாக இருக்கிறது.

காசாவில் வசிக்கும் மக்களால் எகிப்து நாட்டிற்குள் நுழைய முடியாது. இதுவும் இரு இஸ்ரேல் எகிப்து ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகும். ஆனால், இஸ்ரேல் ரஃபா மீது தாக்குதல் நடத்தினால். எல்லையில் உள்ள கட்டுப்பாடுகளை நீக்க நேரிடும் என்பது போல எகிப்து எச்சரித்துள்ளது.
இப்படி அண்டை நாடுகள் எல்லாம் இந்த விவகாரத்தில் உள்ளே வந்தால் எங்கு இது உலக போராக வெடிக்குமோ என்ற அச்சமும் அதிகரித்துள்ளது.