விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 9 பேர் உயிரிழப்பு என தகவல். பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே இயங்கி வரும் தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. விருதுநகர் மாவட்டம், அடுத்த சிவகாசியை அருகே உள்ள வெம்பகோட்டை முத்துசாமிபுரத்தில் விஜய் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இன்று காலை வழக்கம் போல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பணியில் இருக்கும் தொழிலாளர்கள் மருந்து கலவையில் ஏற்பட்ட உராய்வின் காரணமாக, திடீரென கலவையில் கலந்த மருந்துகள் வெடித்து சிதறியதாக கூறப்படுகிறது.

அப்போது தனியார் பட்டாசு ஆலையில் 5 அறைகள் தரைமட்டமாகின. இந்த கலவையில் கலந்த மருந்துகள் வெடி விபத்தில் அங்கு பணியில் இருந்த 5 பெண் தொழிலாளர்கள் மற்றும் 3 ஆண் தொழிலாளர்கள் உள்பட 8 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியது.
மேலும், 4 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனை கண்ட அருகில் இருந்தவர்கள் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனிடையே, தகவலின் அடிப்படையில் அறிந்த சிவகாசி மற்றும் சாத்தூர் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். அப்போது தீயணைப்பு துறையினர் சில மணி நேரம் கழித்து தீயை அணைத்தனர்.
மேலும், இந்த விபத்து குறித்து வெம்பக்கோட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், தற்போது மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர்கள் ரமேஷ் வயது (26), கருப்பசாமி வயது (29), அம்பிகா வயது ( 30), முருகஜோதி வயது (50), முத்து வயது (45), சாந்தா வயது ( 35), குருசாமி வயது (50) ஆகியோர் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. இந்த சம்பவம் அங்கு இருக்கும் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.