கள்ளக்குறிச்சி அருகே கிறிஸ்தவ தேவாலயத்தில் இருந்த மாதா சிலையை அகற்றியதால் பரபரப்பு. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 200-க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டத்திற்கு உட்பட்ட அக்கராயபாளையம் கிராமத்தில் தூய சகாய அன்னை ஆலயம் உள்ளது. நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயத்தின் முன்புறம் மற்றும் இடதுபுறத்தை பொதுமக்கள் பாதையாக பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு பொதுமக்கள் நடப்பதற்கு பாதையை ஆலய வளாகத்திற்குள் விட வேண்டும் என, இந்து முன்னணியினர் மற்றும் பாஜகவினர் போராட்டம் நடத்தினர்.

அதன்பின் சின்னசேலம் வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் கள்ளக்குறிச்சி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் சமாதானக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில், பொதுமக்களுக்கு மாற்று வழி பாதை அமைத்து தர வேண்டும் என ஏற்படுத்தி தரும் வரையில், தற்போது இருக்கும் வழியில் கேட் அமைக்கவோ, சுற்றுச்சுவர் எழுப்பவோ கூடாது என முடிவு எடுக்கப்பட்டது. இந்த நிலையில், நேற்றிரவு திடீரென ஆலய நிர்வாகத்தினர் வெளி ஆட்கள் யாரும் ஆலயத்தில் நுழையாதபடி இரும்பு கேட் அமைத்தனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வருவாய்த்துறை அதிகாரிகள் வந்து, அந்த கேட்டை அகற்றி, வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வாகனத்தில் ஏற்றிச் சென்றனர்.

இதனைத் தொடர்ந்து, ஆலய நிர்வாகத்தினர் மற்றும் கிறிஸ்தவர்கள் ஒன்றிணைந்து, ஆலய வளாகத்தைச் சுற்றி யாரும் நடக்காதபடி, இரவோடு இரவாக சுற்றுச் சுவர் எழுப்பி கேட் அமைத்து தடை செய்தனர். இதுகுறித்து தகவலறிந்த வருவாய்த்துறை அதிகாரிகள் இன்று காலை மீண்டும் நேரில் வந்து, பொதுமக்கள் நடைபாதையாக பயன்படுத்தி வந்த பாதையை தடுத்து, கட்டப்பட்டிருந்த சுவரை இடித்து அப்புறப்படுத்தினர். அப்போது, அங்கு வைக்கப்பட்டிருந்த மாதா சிலையையும் அப்புறப்படுத்தினர்.

இதனால் கிறிஸ்தவர்கள் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தினர். அப்போது, கூட்டத்தில் பெண் ஒருவர் மயங்கி விழுந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும், போராட்டத்தில் ஈடுபட்ட 23 பெண்கள் உள்பட 48 பேரை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர். மேலும், ஆலய வளாகத்திற்குள் கள்ளக்குறிச்சி டி.எஸ்.பி ரமேஷ் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.