குஜராத் மாநிலத்தில் 12 ஆம் வகுப்பு இயற்பியல் தேர்வில் 1 மதிப்பெண் பெற்ற மாணவிக்கு நீட் தேர்வில் 720 மதிப்பெண்கள் பெற்றுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோவை மத்திய சென்னை எம்.பி தயாநிதி மாறன் டிவிட்டரில் பகிர்ந்துள்ளார்.
இந்த ஆண்டு நடந்த நீட் தேர்வில் பெரிய அளவில் மோசடி நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. அதை கண்டித்து நாட்டின் பல பகுதிகளில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில்,12 ஆம் வகுப்பு இயற்பியல் தேர்வில் 1 மதிப்பெண் பெற்ற மாணவி நீட் தேர்வில் முழு மதிப்பெண்களையும் பெற்று வெற்றி பெற்றுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக மத்திய சென்னை எம்பி தயாநிதி மாறன் டிவிட்டரில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் நீட் தேர்வில் பாதிக்கப்பட்ட ஒரு மாணவியின் தாயார் கூறுகையில்;- குஜராத்தை சேர்ந்த ஒரு மாணவி எனக்கு தெரியும். அவரது பெயரை சொல்ல மாட்டேன்.

அந்த மாணவி 12 ஆம் வகுப்பு இயற்பியல் தேர்வில் ஒரு மதிப்பெண் தான் பெற்றார். அகமதிப்பீட்டில் (இன்டர்னல்) பெற்ற 20 மதிப்பெண்களையும் சேர்த்து 21 மதிப்பெண் பெற்று தோல்வி அடைந்தார். ஆனால், இப்போது நீட் தேர்வில் குறிப்பிட்ட மாணவி 720-க்கு 720 மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
என்னுடைய மகளோ அல்லது அப்போது தேர்வில் முதலிடங்களை பிடித்த மாணவர்களுக்கோ கிடைக்காத வகையில் அந்த மாணவி தேர்வில் முழு மதிப்பெண்கள் பெற்றது எப்படி? இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றார்.