மசினகுடி பஞ்சாயத்து மற்றும் அருகே உள்ள 14 கிராமங்களில் யானை வழித்தடத்தை கண்டித்து வீடுகளில் கருப்பு கொடி கட்டி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
மேலும் வனத்துறையின் கடுமையான நடவடிக்கையால் தாங்கள் பாதிக்கப்படுவதாகவும்,உண்மையை மறைத்து வனத்துறையினர் சர்வதிகார போக்கோடு செயல்படுவதாக குற்றம் சாட்டினர்.

மசினகுடி அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் வர்கீஸ் பேசும் போது சத்தியமங்கலத்தில் இருந்து முதுமலைக்கு யானைகள் மசினகுடி வழியாக செல்கின்றன. இந்த ஒரு வழித்தடம் தான் இப்பகுதியில் இருக்கிறது.
யானைகளின் வழித்தடங்களாக இருந்த மசினகுடி பகுதியில் 515 ஏக்கர் நிலம் கையகப்படுத்த இருந்த நிலையில் 7000 ஏக்கர் யானை வழித்தடப்பாதை என உயர்நீதிமன்றத்தில் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

முதுமலை சத்தியமங்கலம் யானை வழித்தடத்தில் மனித விலங்கு மோதல் இதுவரை இல்லை. மசினகுடி பகுதியிலுள்ள 14 கிராமங்களை யானை வழித்தடங்களாக அறிவிக்கக்கோரி தற்சமயம் வனத்துறையினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அதில் 61 ஆயிரம் ஏக்கர் யானை வழித்தடமாக அறிவிக்கப்பட்டால், அது யானைகளின் வாழ்விடமாக மாறிவிடும். யானைகளின் வழித்தடம் என்பது அது போகின்ற வழியில் உணவு தண்ணீர் தட்டுப்பாடு இன்றி கிடைக்க வேண்டும். வாழ்விடமாக மாறிவிடக்கூடாது என நீதிமன்ற உத்திரவு இருப்பதை சுட்டி காட்டினார்.

கடந்த 2009 ஆம் ஆண்டு சத்தியமங்கலத்தில் இருந்து முதுமலைக்கு 900 யானைகள் சென்றதாக நீதிமன்றத்தில் வனத்துறையினர் தெரிவித்திருந்தனர். இதனை அடுத்து அறிவியல் பூர்வமாக யானை திட்டத்தின் கீழ் எடுக்கப்பட்டு கணக்கெடுப்பின்படி 251 யானைகள் இவ்வழியை பயன்படுத்தியுள்ளன.
தற்போது எடுக்கப்பட்ட ஆய்வில் 61 யானைகள் மட்டுமே இவ்வழியை பயன்படுத்துவதாக தெரிவித்தார். மக்களை அப்புறப்படுத்தி விட்டு, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாக வனத்துறை செயல்படுவதாக குற்றம் சாட்டினார்.

வனத்துறையினர் யானை வழித்தடம் என்ற பெயரில் 15 ஆயிரம் மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்க முயற்சிப்பதாக தெரிவித்தார்.