அண்ணாமலை தான் வெற்றி பெற வேண்டும் என கைவிரலை துண்டித்த பாஜக பிரமுகர். பின்னர் மருத்துவமனையில் அனுமதி.
கடலூர் மாவட்டம், அடுத்த குறிஞ்சிப்பாடி அருகே ஆண்டாள், முள்ளிபள்ளம் பகுதியை சேர்ந்தவர் துறை ராமலிங்கம். கடலூர் மாவட்டம், பாரதிய ஜனதா கட்சி துணைத்தலைவர் இவர்.

கோவை நாடாளுமன்ற தொகுதியில் மாநிலத்தலைவர் அண்ணாமலை போட்டியிடுவதால் அவர் ஆதரவு திரட்ட 10 நாட்கள் முன்பு கோவை வந்தார். அப்போது பொதுமக்களிடம் பிரச்சாரம் செய்தார்.
மேலும் நேற்று மாலை 5 மணி அளவில் இவர் பிரச்சாரத்தை முடித்தார். அப்பொழுது அவர் கோவை பகுதியில் அண்ணாமலை தான் வெற்றி பெற வேண்டும் என்று கூறியவாறு கத்தியை எடுத்து இடது கை ஆள்காட்டி விரலை திடீரென துண்டித்துக் கொண்டார்.

இதை பார்த்து அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து அவரை மீட்டு கோவை அவிநாசி சாலையில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்தனர். இது குறித்து துறையூர் ராமலிங்கம் கூறும் போது:-
நான் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பாரதிய ஜனதா கட்சியில் உள்ளேன் . மேலும் 10 நாட்களுக்கு முன்பு கோவை வந்து அண்ணாமலைக்கு ஆதரவு தெரிவித்து பிரச்சாரம் செய்தேன். பின்பு அருகில் இருந்தவர்கள் அவர் தோல்வியை சந்திப்பார் என்று கூறினர்.
இது எனக்கு வேதனையை கொடுத்தது. எனவே அவர் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக எனது விரலை வெட்டிக் கொண்டேன் என்றார். அண்ணாமலை வெற்றி பெற வேண்டும் என்று பாரதிய ஜனதா பிரமுகர் கைவிரலை வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.