அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கோவை பீளமேடு விமான நிலையம் வந்தார். அங்கு அவர், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அதிமுக பற்றி தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார்.
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக ஏன் போட்டியிடவில்லை என்பதற்கு ஏற்கனவே காரணத்தை தெரிவித்துவிட்டோம். அப்படி இருந்தும் அண்ணாமலை, அதிமுகவை திட்டமிட்டு குறை சொல்லி வருகிறார்.
இந்த தேர்தலில் அதிமுக போட்டியிட்டால், 3 அல்லது 4 ஆம் இடம் தான் வரும் எனவும், அவர் கூறியுள்ளார். அவர், மெத்த படித்தவர், மிகப்பெரிய அரசியல் ஞானி. அதிமுகவின் நிலைபாடு குறித்து அவர் விமர்சித்து இருப்பது கண்டிக்கத்தக்கது.

அண்ணாமலை வந்த பிறகு தான் தமிழகத்தில் பாஜக வளர்ந்துள்ளது போல் ஒரு மாயத்தோற்றத்தை உருவாக்கி வருகிறார். அது உண்மை அல்ல. பேட்டியிலேயே தன்னை அடையாளப்படுத்திக்கொண்டு இருக்கிறார்.
இவர், பாஜக மாநில தலைவராக வந்த பிறகு, ஒன்றிய அரசின் புதிய திட்டங்கள் எதையெல்லாம் தமிழகத்துக்கு பெற்று தந்தார்? எதுவுமே கிடையாது. வாயிலேயே வடை சுட்டுக்கொண்டு இருக்கிறார். எப்போது பார்த்தாலும் பொய் செய்திகளை வெளியிட்டுக்கொண்டே இருக்கிறார்.
மற்ற கட்சிகள் பற்றி அவதூறாக பேசுவதைத்தான் அவர் தொடர்ந்து வழக்கமாக கொண்டுள்ளார். கோவை நாடாளுமன்ற தொகுதியில் அவர் போட்டியிட்ட போது, 100 நாளில் 500 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என வாக்குறுதி கொடுத்தார். எந்த கட்சி தலைவரும் இப்படி ஒரு வாக்குறுதி கொடுத்தது இல்லை.

இப்படி பொய்யான செய்தியை சொல்லி, வாக்கு பெற்றுள்ளார். இப்போது மத்தியில் பாஜக ஆட்சிதான் உள்ளது. 100 நாளில் 500 வாக்குறுதியை நிறைவேற்றுவாரா? என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
இதுபோன்ற தலைவர்கள் இருப்பதால் தான், 300-க்கும் மேற்பட்ட இடங்களை வென்று ஆட்சி அமைத்த பாரதிய ஜனதா கட்சி, இப்போது சறுக்கி, கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து ஆட்சி அமைத்துள்ளது.இதை, முதலில் அண்ணாமலை புரிந்து கொள்ள வேண்டும்.
அவர், தன்னை அடையாளப்படுத்திக்கொள்ள அதிமுக பற்றி விமர்சித்து வருகிறார். இவ்வாறு அவர் தெரிவித்தார். எடப்பாடி பழனிச்சாமி அளித்த பேட்டியில்;- ‘ஓ.பி.எஸ்., அதிமுகவுக்கு வர்றது, போறது எல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும். இது கடையில் விற்கும் பொருள் அல்ல.

இது, கட்சி. அதிமுகவுக்கு என்று சில விதிமுறைகள் உள்ளன. அந்த விதிமுறைகள்படி தான் கட்சியை நடத்துவோம். அவர், இந்த கட்சிக்கு விரோதமாக செயல்பட்ட காரணத்தினால் தான், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து அவர் நீக்கப்பட்டார்.
இது, நான் அல்லது வேலுமணி எடுத்த முடிவு அல்ல. அதிமுக பொதுக்குழு எடுத்த முடிவு. அதிமுக தொண்டர்களின் மனநிலை இது. அவர் மட்டும் அல்ல. அவரோடு சேர்ந்து 3 பேர் நீக்கப்படுகிறார்கள்.
இது, முழுக்க முழுக்க பொதுக்குழு எடுத்த முடிவு. ஒட்டுமொத்த அதிமுக தொண்டர்களின் குரல், பொதுக்குழு தீர்மானமாக வெளிவந்துள்ளது. அவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்கிற எண்ணம் ஒருபோதும் இல்லை’ என்றார்.

அதிமுகவை ஒருங்கிணைப்போம் என சசிகலாவால் எப்படி சொல்ல முடியும்? அவர் அதிமுக என்கிற கட்சியிலேயே இல்லை. கடந்த 2021 சட்டமன்ற பொதுத்தேர்தலின்போது சசிகலா ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் அரசியலில் இருந்து நான் விலகுவதாக கூறியிருந்தார்.
தற்போது 3 ஆண்டு காலம் கழித்து ரீ-எண்ட்ரி என்கிறார். வெளியே போய் விட்டு, மீண்டும் வந்து இணைவதற்கு இது என்ன கார்ப்பரேட் கம்பெனியா? இது கட்சி. எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு அதிமுக இரண்டாக பிளவுபட்ட போது, ஜானகி அம்மாள் அழகாக அறிக்கை வெளியிட்டார்.

அம்மா தான் இந்த கட்சியை ஏற்று நடத்துவார்கள், அவருக்கு நான் உறுதுணையாக இருப்பேன் என கூறியிருந்தார். அந்த நற்பண்பு சசிகலாவிடமும் இருக்கும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
அப்படிப்பட்ட எண்ணத்தில் அவர் செயல்பட்டால் நன்றாக இருக்கும் என தொண்டர்கள் அனைவரும் நினைக்கிறார்கள்’ என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.