ஒன்றிய அரசிடம் கடன் பெற்று தருவதாக பண மோசடி நடந்த விவகாரத்தில் நடிகை நமீதா கணவர்,பாஜக மாநில நிர்வாகி ஆகியோர் சம்மனுக்கு ஆஜராகாததால் இருவரையும் கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
சேலத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் எம்.எஸ்.எம்.இ ப்ரோமோஷன் கவுன்சில் என்ற அமைப்பு சார்பில் சிறு தொழில் செய்வதற்கு ஒன்றிய அரசிடம் இருந்து கடன் பெற்று தருவதாக கூறி, அமைப்பின் தேசிய தலைவரான மதுரை உசிலம்பட்டியை சேர்ந்த முத்துராமன் செயலரான பஞ்சாப்பை சேர்ந்த துஷ்யந்த் யாதவ் தமிழ்நாடு தலைவரான நடிகை நமீதாவின் கணவர், சவுத்ரி ஆகியோர் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர். இதில் அரசின் முத்திரை, தேசியக்கொடி ஆகியவற்றை பயன்படுத்தி ஏமாற்றுவதற்காக கிடைத்த தகவலின் பெயரில் சூரமங்கலம் போலீசார் முத்துராமன் துஷ்யந்த் யாதவ் ஆகியோரை பிடித்து விசாரித்தனர்.

இந்த நிலையில் கோபால்சாமி என்பவர் தன்னிடம் 50 லட்சம் வாங்கிக் கொண்டு, அந்த அமைப்பின் தமிழ்நாடு தலைவர் பதவி தருவதாக கூறி ஏமாற்றி விட்டு, 4 கோடி வாங்கி நமிதா கணவருக்கு அந்த பதவியை தந்து விட்டதாக கொடுத்த புகாரின் பேரில் முத்துராமன், துஷ்யந்த் யாதவ் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களை 2 நாள் காவலில் எடுத்து போலீசார் விசாரித்தனர். இதற்கிடையே கோபால் சாமியும், முத்துராமனும் பேசிய ஆடியோ ஒன்று வெளியானது. பாஜக தலைவர் அண்ணாமலை நடைப்பயணம் சிவகங்கை வந்தபோது ஒன்றரை கோடி ரூபாய் கொடுத்திருப்பதாகவும், மதுரைக்கு வந்த போது 75 லட்சம் கேட்டதாகவும், முத்துராமன் அந்த ஆடியோவில் பேசியிருந்தார்.
இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் இந்த அமைப்பின் தமிழ்நாடு தலைவரான நடிகை நமீதாவின் கணவர் சவுத்ரி பாஜக முக்கிய நிர்வாகியான மஞ்சுநாத் ஆகியோரிடம் விசாரிக்க சூரமங்கலம் போலீசார் முடிவு செய்துள்ளனர். முத்துராமனை காவலில் எடுத்து விசாரித்த போது பணத்தை யார் மூலம் பாஜகவுக்கு கொடுத்தோம் என்ற தகவலை தெரிவித்துள்ளார். இதனால் தான் மஞ்சுநாத்தை விசாரணைக்கு அழைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இவர் பாஜக ஊடகப்பிரிவு மாநில செயலாளர் பொறுப்பில் உள்ளார். நமீதாவின் கணவர் சவுத்ரி, மஞ்சுநாத் ஆகிய இருவரும் விசாரணைக்கு ஆஜராகுமாறு சேலம் சூரமங்கலம் இன்ஸ்பெக்டர் சிவகுமார் சம்மன் அனுப்பியுள்ளார். அதில் 14ஆம் தேதி நேற்று ஆஜராகுமாறு தெரிவித்திருந்தார். ஆனால் அவர்கள் இருவரும் நேற்று வரவில்லை. இதனையடுத்து அவர்களை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த மோசடியில் பாஜகவின் முக்கிய பிரமுகர்களுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.