நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் அளித்த புகாரின் பேரில் கோவையை சேர்ந்த கிராபிக்ஸ் (VFX) மேற்பார்வையாளர் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த சம்பவம் சினிமா துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாவட்டம், அடுத்த பாப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்த Realworks என்ற நிறுவனத்தைச் சேர்ந்த சிவபிரசாத் என்பவர் பார்த்திபன் இயற்றி வரும் TEENZ என்ற திரைப்படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளுக்கான மேற்பார்வையாளராக இருந்துள்ளார்.

கடந்த பிப்ரவரி 10 அல்லது 20 ஆம் தேதிக்குள் பணிகளையும் முடித்து கொள்வதாக கூறியிருந்த நிலையில், சிவபிரசாத் 68,54,400 ரூபாய் கேட்ட நிலையில், பார்த்திபன் 42,00,000 செலுத்தியுள்ளார். ஆனால் குறித்த நேரத்தில் பணிகளை முடிக்காத நிலையில், பார்த்திபன் ஏப்ரல் 19 ஆம் தேதி வரை கால நீட்டிப்பு கொடுத்துள்ளார்.
இதை அடுத்து நான்கில் ஒரு பங்கு பணிகளை மட்டுமே முடித்த சிவப்பிரசாத் படத்தின் முக்கிய கிராபிக்ஸ் காட்சிகளை ஏப்ரல் மாதத்திற்குள் முடிக்க முடியாது என கூறியிருக்கிறார்.

இதனிடையே சிவப்பிரசாத் கடந்த மாதம் நான்காம் தேதி (04.06.2024), 88,38,120 ரூபாய் தொகை செலுத்த வேண்டும் என பார்த்திபனுக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார்.
இவ்வாறான சூழலில் தன்னை ஏமாற்றியதாக பார்த்திபன் கோவை பந்தய சாலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரின் பேரில் 406, 420 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது