கோவை ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை கொள்ளையில் 95 சதவீதம் நகைகள் மீட்கப்பட்டுள்ளதாக கோவை மாநகர காவல் துணை ஆணையர் சந்தீஷ் தெரிவித்தார்.
கோவை ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை கொள்ளை தொடர்பாக துணை ஆணையர் சந்தீஷ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கோவை காந்திபுரத்தில் 28 ம் தேதி ஜோஸ் ஆலுக்காஸ் நகைகடையில் 4.8 கிலோ தங்கம், பிளாட்டினம், வைரம் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இது தொடர்பான விசாரணையில் விஜய் என்பவர் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது. அந்த விஜய் மீது ஏற்கனவே இரு வழக்குகள் இருக்கின்றது. இந்நிலையில் விஜய் மனைவி நர்மதா என்பவர் கைது செய்யப்பட்டு 3.2 கிலோ தங்கம் மீட்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று விஜய் மாமியார் யோகராணி என்பவர் தர்மபுரி மாவட்டம் தும்பலஹல்லியில் இலங்கை அகதிகள் முகாமில் கைது செய்யபட்டுள்ளார். அவரிடம் இருந்து 1.35 கிலோ தங்க, வைர நகைகள் மீட்கப்பட்டுள்ளது. பெரும்பாலான நகைகள் மீட்கப்பட்டுள்ள நிலையில், 300 முதல் 400 கிராம் மட்டும் நகைகள் மீட்கப்பட வேண்டி இருக்கின்றது. 5 தனிப்படை போலீசார் தீவிரமாக தேடுதல் பணியில் ஈடுபட்டு நகைகளை மீட்டு இருக்கின்றனர் என தெரிவித்தார். கொள்ளை போன நகைகளில் 95 சதவீதம் நகைகள் மீட்கப்பட்டுள்ளது எனவும், விஜய் என்பவரை தேடி வருகின்றோம். இரண்டு மூன்று நாட்களில் பிடித்து விடுவோம் எனவும் தெரிவித்தார்.
மொத்தம் 4.8 கிலோ நகைகள் திருடப்பட்டு இருக்கின்றது என தெரிவித்த அவர், நகைகடையில் இருந்த சின்ன ஓட்டையை பயன்படுத்தி உள்ளே நுழைந்து திருடி இருக்கின்றார் எனவும், வெளியில் இருந்து இந்த திருட்டிற்கு யார் உதவி செய்தார் என்பது குறித்து விசாரித்து வருகின்றோம் எனவும், விஜய் பிடித்தால் மட்டுமே அந்த நபர் யார் என்பது தெரியவரும் என தெரிவித்தார். 2 அடி ஓட்டை மட்டுமே நகைகடையில் இருந்தது. வெளியில் இருந்த நிலையில் அது குறித்த தெரிந்த நபர்கள் ஜெயிலில் இருந்த நபர்கள் யாராவது இந்த கொள்ளைக்கு உதவினார்களா என விசாரிக்கின்றோம் எனவும், விஜய் மீது ஏற்கனவே சிறிய திருட்டு வழக்குகள் மட்டுமே இருக்கின்றது எனவும் தெரிவித்தார்.

குறிப்பாக தும்பலஹல்லி இலங்கை அகதிகள் முகாமில் வைர நகைகளை குப்பை மற்றும் குழிதோண்டி புதைத்து வைத்து இருந்தார்கள். புதர்களுக்குள் கவர் போட்டு மறைத்து வைத்திருந்தனர் எனவும், அதை பறிமுதல் செய்து இருக்கின்றோம் எனவும் தெரிவித்த அவர், நகைகளை திருடிய பின் என்ன செய்வது என வேறு திட்டம் ஏதாவது போட்டு இருக்கலாம் எனவும், ஆனைமலையில் அவர் எதிர்பார்க்காமல் போனதால் அவர் தப்பி ஒடிவிட்டதாகவும், ஓடிப்போகாமல் இருந்தால் விஜய்யின் முழுமையான திட்டம் தெரிந்து இருக்கும் எனவும் தெரிவித்தார்.
நகை கொள்ளைக்கு வெளிநபர்கள் தொடர்பு கட்டாயம் இருக்கும் என தெரிவித்த அவர், தனிப்படை போலீசார் கர்நாடகா, கேரளா, மதுரை , ஆனைமலை, கோவை ஆகிய பகுதிகளில் தேடுதல் பணியில் ஈடுபட்டனர் எனவும் தெரிவித்தார். இலங்கை அகதிகள் முகாமில் இருந்து நர்மதா எப்படி வெளியில் சென்றார் என்பது குறித்து கியூ பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் துணை ஆணையர் சந்தீஷ் தெரிவித்தார்.