முகூர்த்தம் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு சென்னையில் இருந்து இன்று 335 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து, அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் வெளியிட்ட அறிக்கை;-
இன்று வெள்ளிக்கிழமை முகூர்த்த நாள், நாளை சனிக்கிழமை மற்றும் நாளை, மறுநாள் ஞாயிறு வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையில் இருந்தும் இதர இடங்களுக்கும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளது.
சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு இன்று 280 பேருந்துகளும்,
நாளை 355 பேருந்துகளும் மற்றும் சென்னை கோயம்பேட்டில் இருந்து நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு இன்று மற்றும் நாளை 55 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
எனவே, தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக இன்று 280 பேருந்துகளும் நாளை 355 பேருந்துகளும், கோயம்பேட்டில் இருந்து 55 பேருந்துகள் மேற்கூறிய இடங்களில் இருந்தும் மற்றும் பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோவை ஆகிய இடங்களில் இருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்த வார இறுதியில் இன்று 9,276 பயணிகளும், சனிக்கிழமை 5,796 பயணிகளும் ஞாயிறு அன்று 8,894 பயணிகளும் முன்பதிவு செய்துள்ளனர்.
இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் டிஎன்எஸ்டிசி செயலி மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.