வாக்குசாவடியில் வாக்களிக்க வந்த 3 முதியவர்கள் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் பழைய சூரமங்கலம் பாண்டியன் தெருவைச் சேர்ந்தவர் பழனிசாமி வயது (65). இவர் ஓய்வு பெற்ற தூய்மை பணியாளர். இவர் தனது மனைவி கமலாவுடன் நேற்று காலை அங்குள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளிக்கு, வாக்களிக்க வந்தார். அப்போது, வரிசையில் நின்றிருந்த பழனிசாமி திடீரென மயங்கி விழுந்தார்.

இதை அடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, அருகே உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் அவரை பரிசோதித்து பார்த்த போது, அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
பழனிசாமி இதய நோயாளி என்பதால், மயங்கி விழுந்து இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே உள்ள கொண்டையம்பள்ளி பகுதியைச் சேர்ந்த ரங்கசாமி மனைவி சின்ன பொண்ணு வயது (77).

இவர் நேற்று, கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட கெங்கவல்லி சட்டமன்றத் தொகுதியில், செந்தாரப் பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்க வந்தார்.
பின்னர் வாக்குச்சாவடி அலுவலர் சின்னபொண்ணுவின் கை விரலில் அழியாத மையை வைத்தார். அப்போது, திடீரென சின்னபொண்ணு மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

இதை அடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி. திருத்தணி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நெமிலி கிராமத்தை சேர்ந்தவர் கனகராஜ் வயது (72).
இவரை அவரது மகன் ஸ்ரீதர் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க அந்த பகுதியில் உள்ள வாக்குச்சாவடி எண் – 269-க்கு அழைத்து வந்துள்ளார். அப்போது வாக்குச்சாவடி மையத்திற்கு உள்ளே வந்த கனகராஜ் வாக்களிக்க செல்லும் பொழுது திடீரென்று மயங்கி விழுந்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது மகன் உடனடியாக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு அவரை பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
அப்போது கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஜனநாயக கடமையாற்ற வந்த 3 முதியவர்கள் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.