கோவை மாவட்டத்தில் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் திருட்டு, கொலை உள்ளிட்ட குற்ற சம்பவங்களில் ஈடுபடுவது அதிகரித்து காணப்படுகிறது. அப்போது குற்ற செயல்களில் ஈடுபடும் சிறுவர்களை நல்வழிப்படுத்த சிறுவர்கள் சீர்திருத்த பள்ளி ஒன்று உள்ளது.
அங்கு சிறுவர்களுக்கு சீர்திருத்த பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அதை மேற்கொண்டும் போதிலும் குற்றங்கள் குறைந்தபாடில்லை. எனவே குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு கோவை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டு உள்ள சிறுவர்களை நல்வழிப்படுத்த சிறுவர் நீதி வாரியத்தால் முடிவு செய்யப்பட்டது.
இதனால் நான்கு சிறுவர்கள் கோவை சிங்காநல்லூரில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, அங்கு 15 நாட்கள் அவசர சிகிச்சை பிரிவு அல்லது வேறு ஏதாவது பிரிவில் பணி செய்ய அறிவுறுத்தப்பட்டனர்.
அவ்வாறு பணி செய்தால் மட்டும் ஜாமீன் வழங்கப்படும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சமூக சேவை திட்டத்தின் கீழ் போக்சோ, கொள்ளை, கொலை போன்ற குற்ற வழக்குகளில் சிக்கிய 4 சிறுவர்கள் கடந்த மாதம் இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அங்கு இருப்பிட மருத்துவ அதிகாரி மருத்துவர் மணிவண்ணன் மேற்பார்வையில் அந்த சிறுவர்களுக்கு அறுவை சிகிச்சை பிரிவு, சமையல் கூடம் ஆகிய இடங்களில் 15 நாட்கள் பணி வழங்கப்பட்டது. அங்கு அவர்கள் உதவியாளராக பணியாற்றினர்.
சமையல் கூடத்தில் பணியாற்றிய சிறுவனுக்கு நெருப்பு அருகே செல்லாதவாறு காய்கறி நறுக்குதல், பாத்திரம் கழுவுதல் போன்ற பணிகள் வழங்கப்பட்டது. அவசர சிகிச்சை பிரிவில் பணியாற்றிய சிறுவனுக்கு அங்கு வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவ ஊழியர்களுக்கு உதவி செய்யும் பணி வழங்கப்பட்டது.

அதை தொடர்ந்து மருத்துவனை சுத்த செய்யும் பணியையும் மேற்கொண்டனர். இ.எஸ்.ஐ மருத்துவமனையின் இந்த திட்டத்தின் மூலம் சிறுவர்களை நல்வழிப்படுத்த 15 நாட்கள் பணி வழங்கியது. இதுவே முதல் முறையாகும். இதனால் குற்ற சம்பவங்களில் ஈடுபடும் சிறுவர்களை நல்வழிபடுத்த இது ஒரு சிறந்த முறையாகும்.