பவுர்ணமி, வார இறுதிநாளையொட்டி விழுப்புரம் கோட்ட அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:-
விழுப்புரம் கோட்ட தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழம் சார்பில் நாளை 20 ஆம் தேதி திருவண்ணாமலை பவுர்ணமி கிரிவலத்தையொட்டி பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலைக்கு 320 சிறப்பு பேருந்துகளும்,

புதுச்சேரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ஆரணி, ஆற்காடு, காஞ்சிபுரம், சிதம்பரம், பண்ருட்டி, திருக்கோவிலூர், விருதாசலம், திருப்பத்தூர் ஆகிய ஊர்களிலிருந்து 150 சிறப்பு பேருந்துகள் கூடுதலாக இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதை தொடர்ந்து இன்று 19 ஆம் தேதி மற்றும் நாளை 20 ஆம் தேதி ஆகிய வார இறுதி நாட்களில் மக்கள் கிளாம்பாக்கத்திலிருந்து விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சிதம்பரம்,

விருத்தாசலம், திருவண்ணாமலை மற்றும் போளூர் ஆகிய ஊர்களுக்கு அதிகளவில் பயணம் செய்வார்கள் என்பதால் அதற்கு ஏதுவாக விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இன்று 125 பேருந்துகளும், நாளை 420 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 545 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
மேலும் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து ஓசூர், திருவண்ணாமலை (வழி ஆற்காடு, ஆரணி), மற்றும் காஞ்சிபுரம், வந்தவாசி வழியாக இன்றும், நாளையும் 40 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

எனவே பயணிகள் https://www.tnstc.in என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்து சிறப்பு பேருந்துகளை பயன்படுத்தி கொள்ளலாம்.
மேலும் பயணிகள் கூட்டம் குறையும் வரை தேவைக்கேற்ப பேருந்துகளை ஏற்பாடு செய்திடவும், பேருந்து இயக்கத்தினை மேற்பார்வை செய்திடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.