கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அடுத்த உடையானாட்சி ஊராட்சிக்கு உட்பட்ட புதூர் கிராமத்தில் சுமார் 170 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில் இந்த கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் (55) என்பவர் உடல் நலக்குறைவால் நேற்று முன்தினம் உயிரிழந்தார். அவரது உடலை மயானத்திற்கு எடுத்து செல்ல பாலம் இல்லாததால் தண்ணீரில் முழங்கால் அளவில் உடலை சுமந்து கொண்டு செல்லும் நிலை உள்ளது.
மேலும் இந்த கிராம மக்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்தப்படும் மயானம் மணிமுக்தா ஆற்றங்கரை ஓரத்தில் அமைந்துள்ளது. இந்த மயானத்திற்கு செல்வதற்கு ஒரு ஓடை பகுதியை கடந்து செல்ல வேண்டிய சூழல் உள்ளது, ஓடையில் தண்ணீர் எப்பொழுதும் இருந்து கொண்டே இருப்பதால் இறந்து போனவர்களின் சடலத்தை தண்ணீரில் மிதந்தபடியே எடுத்துச் செல்லும் அவலம் நீடித்து வருகிறது. தற்போது குறைந்த அளவே தண்ணீர் உள்ளது. இதனால் இறந்தவர்களின் உடலை சற்று சிரமத்துடன் தூக்கிச் சென்றனர். அளவுக்கு அதிகமாக தண்ணீர் வந்தால் உடலை தூக்கி செல்ல முடியாமல் இப்பகுதி மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருவதாக கூறுகின்றன.
மேலும் இந்த ஆற்றில் மழைக்காலங்களில் தண்ணீர் அதிக அளவு செல்வதோடு வெள்ள அபாய எச்சரிக்கைகளும் விடப்படும். இதனால் ஆபத்தான முறையில் சடலத்தை சுமந்து கொண்டு கரையை கடக்க நேரிடும். மேலும் மழைக் காலங்களில் கிராம மக்கள் இறந்து போனவர்களின் உடலை மாயனத்திற்கு எடுத்துச் செல்ல முடியாமல் ஆற்றங்கரையிலேயே புதைத்து விடுவதாகவும் தெரிவிக்கின்றன. இறந்தவர்களின் இறுதி சடங்கு காரியம் இது போன்ற துக்க நிகழ்ச்சி நடத்த முடியாமல் இப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றன. ஆகவே மயானத்திற்கு செல்ல பாலம் அமைத்து தர வேண்டும் என இப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.