விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிக்கிறது” என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- “பொதுவாக தேர்தல் என்ற உடனேயே, முதலாவதாக களத்தில் இறங்குவது அதிமுக தான். தேர்தலைக் கண்டு அஞ்சுகின்ற, பயப்படுகின்ற, அச்சப்படுகின்ற இயக்கம் அதிமுக அல்ல என்பதை அனைவரும் நன்கு அறிவர்.

தமிழகத்தில் அலங்கோல ஆட்சியை நடத்தி வரும் திமுகவினர், ஆளும் கட்சி என்ற அதிகார தோரணையோடு அரசு எந்திரங்களை முழுமையாகப் பயன்படுத்தி, நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவை பொது தேர்தலில் பல்வேறு அராஜகங்களையும், தில்லுமுல்லுகளையும் செய்து பெற்றுள்ள வெற்றி என்பது,
மக்களின் ஏகோபித்த எண்ணங்களை முழுமையாக பிரதிபலிக்கும் முடிவு அல்ல என்பதை நான் ஏற்கெனவே தெரிவித்திருந்தேன். அராஜகம் என்றால் திமுக. திமுக என்றால் அராஜகம். திமுகவினர் வன்முறை மற்றும் அராஜகங்களை நிகழ்த்துவதில் கைதேர்ந்தவர்கள்.

திமுக எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகின்றதோ அப்போதெல்லாம் இதுபோன்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்கதையாக நடைபெறுவதை மக்கள் பார்த்துக்கொண்டு தான் இருக்கின்றார்கள். இந்தத் தேர்தலும் ஜனநாயக முறைப்படி நடைபெறவில்லை.
எதிர்க்கட்சியின் பரப்புரைகள் மக்கள் காதுகளிலேயே விழாத அளவுக்கு அவர்கள் சிறைபிடிக்கப்பட்டார்கள். `மக்களை அடைத்து வைத்தால், மக்கள் அடைக்கப்பட்டிருக்கின்ற இடத்துக்கே சென்று மக்களை சந்திப்பேன் என நான் எச்சரித்த பிறகு,

பேருந்துகளில் மக்களை அடைத்து சுற்றுலா அழைத்துச் செல்லும் புது ஃபார்முலாவை அறிமுகப்படுத்தியது திமுக. அள்ளி இறைக்கப்பட்ட பணம், மது, கொலுசு, குக்கர், தங்க காசு உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் என, இவை எல்லாவற்றையும் தாண்டி திமுகவின் மிரட்டல் அப்பாவி மக்களைப் பெருமளவில் அச்சுறுத்தியது.
அந்த இடத்துக்கு வர மறுத்த அப்பாவி மக்கள் திமுகவினரால் மிரட்டப்பட்டார்கள். அவ்வாறு அடைத்து வைக்கப்பட்டடிருந்த மக்களுக்கு காலை மற்றும் மதிய உணவும், வீட்டுக்குச் செல்லும் போது வீட்டில் உள்ள அனைவருக்கும் இரவு உணவு மற்றும் பல்வேறு பரிசுப் பொருட்களும் வழங்கி ஜனநாயகப் படுகொலை நடந்தேறியது.

திமுகவினர் அழைக்கும் இடத்துக்கு வந்து காலை முதல் இரவு வரை உட்கார்ந்து இருக்கவில்லையென்றால், முதியோர் உதவித் தொகையோ, வேறு எந்த அரசு நலத் திட்டங்களோ வழங்கப்படமாட்டாது என்கிற மிரட்டலுக்கு பயந்து,
மக்கள் சொந்த மண்ணில் அகதிகளைப் போல நடத்தப்பட்ட விதத்தை நினைத்தாலே நெஞ்சம் பதறுகிறது. அந்த வகையில், திமுக ஆட்சியில், விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் ஜனநாயக முறைப்படி சுதந்திரமாக நடைபெறுமா? என்ற சந்தேகமும், கேள்வியும் எழுந்துள்ளது.

திமுக அரசின் அமைச்சர்களும், திமுகவினரும் ஆட்சி அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவதோடு, பணபலம், படைபலத்துடன் பல்வேறு அராஜகங்கள் மற்றும் வன்முறைகளை கட்டவிழ்த்துவிடுவார்கள் என்பதாலும்,
மக்களை சுதந்திரமாக வாக்களிக்க விடமாட்டார்கள் என்பதாலும், தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடைபெறாது என்பதாலும், 10.7.2024 அன்று நடைபெற உள்ள விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிக்கிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

ஒரு குடும்பம் மட்டும் அசுர வளர்ச்சி பெற வேண்டும் என்ற நோக்கத்தில், அதிகார துஷ்பிரயோகங்கள், அச்சுறுத்தல்கள், வன்முறை மற்றும் சட்டம் ஒழுங்கை சீர்கெடுப்பது, வெற்று வாக்குறுதிகளை அளிப்பது, விளம்பரங்கள் செய்வது முதலான செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் திமுகவினரின் முகத்திரையைக் கிழித்து,
திமுக ஆட்சியின் பல்வேறு மக்கள் விரோதச் செயல்களை நாட்டு மக்களுக்கு எடுத்துரைத்து, எதிர்வரும் 2026, சட்டமன்றப் பொது தேர்தலில் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் நல்லாசியோடும், தமிழக மக்களின் பேராதரவோடும்,

மக்கள் நலன் ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வரும் அதிமுகவின் மக்கள் ஆட்சி மீண்டும் மலர்வது உறுதி என்பதை மட்டும் இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.