வடலூர் திருஅருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையத்தில் 153-வது ஆண்டு தைப்பூச ஜோதி தரிசன பெருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று 7 திரைகளை விலக்கி ஜோதி தரிசனம் நடக்கிறது. வாடிய பயிரை கண் டபோதெல்லாம் வாடினேன் என்று கூறிய ராமலிங்க அடிகளார் என்று அழைக்கப்படுகிற வள்ளலார், கடலூர் மாவட்டம், வடலூரில் சத்தியஞான சபையை நிறுவினார்.
இங்கு ஆண்டுதோறும் தைப்பூச ஜோதி தரிசன பெருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு 153-வது ஜோதி தரிசன விழாவையொட்டி, சத்தியஞான சபையில் நேற்று அதிகாலை 5 மணிக்கு அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம் பாடப்பட்டது. அதனை தொடர்ந்து காலை 7.30 மணிக்கு தரும சாலையில் சன்மார்க்க கொடி ஏற்றப்பட்டது. பின்னர் வள்ளலார் பிறந்த ஊரான மருதூர் வள்ளலார் இல்லத்தில், மருதூர் கிராம மக்களால் கொடியேற்றப்பட்டது.

இதனை அடுத்து வள்ளலார் தண்ணீரால் விளக்கு எரிய செய்த நற்கருங்குழியிலும், அவர் சித்திபெற்ற மேட்டுக்குப்பத்திலும் சன்மார்க்க கொடிகள் ஏற்றப்பட்டது. இதனை அடுத்து சத்தியஞான சபைக்கு இடம் வழங்கிய பார்வதிபுரம் கிராமமக்கள், பலவகை பழங்கள், சீர்வரிசை பொருட்களுடன், வள்ளலார் பயன்படுத்திய பொருட்களையும், வள்ளலார் திருவுருவ படத்தையும் பல்லக்கில் வைத்து மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக சத்தியஞான சபை வளாகத்தில் அமைந்துள்ள கொடிமரம் அருகே வந்து ஒன்று கூடினர்.

பின்னர் சன்மார்க்க அன்பர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அருட்பெருஞ்ஜோதி, அருட்பெருஞ்ஜோதி, தனிப் பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி என்ற வள்ளலாரின் பாடலை பாடியும் வள்ளலார் எழுதிய கொடி பாடல்களை பாடி கொண்டே காலை 10 மணி அளவில் சன்மார்க்கக் கொடியேற்றம் நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். மேலும் சத்தியஞான தர்மசாலையில் தொடர்ந்து அன்னதானமும் நடைபெற்று வருகிறது. இந்த விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறை கடலூர் உதவி ஆணைய சந்திரன், வள்ளலார் தெய்வ நிலைய நிர்வாக அதிகாரி ராஜா சரவணக்குமார் ஆகியோர் செய்துள்ளனர்.

ஜோதி தரிசணத்தை காண வடலூரில் ஒன்று கூடுவார்கள் என்பதால், அசம்பாவித சம்பவங்கள் ஏதேனும் நடைபெறாமல் தடுக்கும் விதமாக விழுப்புரம் டி.ஜ.ஜி திஷா மித்தல் மேற்பார்வையில் கடலூர் மாவட்ட எஸ்.பி ராஜாராம் தலைமையில் ஏ.டி.எஸ்.பி அசோக்குமார், நெய்வேலி டி.எஸ்.பி சபியுல்லா உள்பட 7 டி.எஸ்.பி.கள் மற்றும் வடலூர் இன்ஸ்பெக்டர் ராஜா உள்பட 1200-க்கு மேற்பட்ட போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
இதனால் பல்வேறு பகுதிகளில் 150 கண்காணிப்பு கேமராக்கள், 10 உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் தற்காலிகமாக மாற்றம் செய்யப்பட்டுள்ள போக்குவரத்திற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்குமாறு காவல்துறை சார்பில் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.