ஏற்காட்டில் காட்டுக்குள் கண்டெடுக்கப்பட்ட பெண் சடலம் யாரென்று போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சேலம் மாவட்டம், அடுத்த ஏற்காடு சுற்றுலா தலத்திற்கு செல்லும் 40 அடி பாலம் அருகே, மலைப்பாதையில் ஒரு சூட்கேஸ் கிடந்தது. அதனை பார்த்த வனக்காவலர் பெருமாள் என்பவர் ஏற்காடு காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தார்.

அதன் பேரில் இன்ஸ்பெக்டர் செந்தில்ராஜ் மோகன் தலைமையிலான போலீசார் சம்பவமிடம் விரைந்து வந்து சூட்கேஸை கைப்பற்றி திறந்து பார்த்தனர். அதனுள் அழுகிய நிலையில் இளம்பெண் சடலம் இருந்தது.
இது பற்றி ஏற்காடு டவுன் கிராம நிர்வாக அலுவலர் மோகன்ராஜ் கொடுத்த புகாரின் பேரில் கொலை வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர். இந்த கொலையில் ஈடுபட்டவர்களை பிடிக்க மாவட்ட எஸ்.பி அருண் கபிலன் மூன்று தனிப்படைகளை அமைத்தார்.

இந்த கொலையில் இளம் பெண் சடலத்தை அடைத்து வீசப்பட்ட சூட்கேஸ் புதிதாக இருந்தது. அதனால் சடலத்தை வைப்பதற்காகவே பெரிய அளவிலான சூட்கேஸை கடையில் புதிதாக கொலையாளி வாங்கி இருப்பதை போலீசார் உறுதி செய்தனர்.
அதன் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்தியதில் கோவையில் உள்ள ஒரு கடையில் அந்த சூட்கேஸ் வாங்கி இருப்பது தெரியவந்தது.

அதுகுறித்து தீவிர விசாரணை நடத்தியதில் சூட்கேஸை வாங்கியது திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பரவக்கோட்டையை சேர்ந்த நடராஜன் என தெரியவந்தது. அவரை நேற்று போலீசார் கைது செய்தனர்.
அப்போது விசாரணையில், தனது திருமணம் மீறிய உறவு காதலியான தேனி மாவட்டம் முத்துலாபுரத்தை சேர்ந்த சுபலட்சுமி என்பவரை கொலை செய்து சூட்கேஸில் அடைத்து ஏற்காடு மலைப்பாதை காட்டில் வீசினேன் என ஒப்புக்கொண்டார்.

மேலும் கொலையில் சடலத்தை தூக்கி சென்று போட அண்ணன் முறையுள்ள உறவினரான மன்னார்குடி பரவக்கோட்டையை சேர்ந்த கனிவளவன் உதவியதாக தெரிவித்தார்.
மேலும் தனக்கு கடந்த 2017-ம் ஆண்டு திருமணமாகி 2 குழந்தைகள் இருப்பதாகவும், இந்த நிலையில் திருமணத்திற்கு முன் மேட்ரிமோனியில் எனக்கு பெண் தேடிய போது, சுபலட்சுமி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டதாக தெரியவந்தது.

இந்த நிலையில் இருவருக்கும் தனித்தனியே திருமணமாகியும் தொடர்ந்து பழகி வந்ததாகவும் தெரிவித்துள்ளார். ஒரு கட்டத்தில் சுபலட்சுமி தனது கணவரை விட்டு பிரிந்து வந்துவிட்டார். அவருக்கும் 2 குழந்தைகள் உள்ளன.
இதனால் வேறு வழித்தெரியாமல், சுபலட்சுமியை கோயம்புத்தூரில் வீடு வாடகை எடுத்து வைத்திருக்கிறார் நடராஜன்.

இந்த நிலையில் சம்பவத்தன்று ஜனவரி 1-ம் தேதி இரவு சுபலட்சுமி வீட்டிற்கு நடராஜன் சென்ற போது, அவர் கையில் இருந்த அவரது பெயர் பொறிக்கப்பட்டிருந்த டேட்டூ எங்கே என்று கேட்டு சண்டையில் ஈடுபட்டார்.
அதில், கோபப்பட்டு நடராஜன் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார். இந்த நிலையில் தான் தனது உறவினரான கனிவளவனை தொடர்புக்கொண்டு நடந்தவற்றை கூறியுள்ளார்.

பின்னர் அவரும் நடராஜனும் சூட்கேசில் வைத்து காட்டுப்பகுதியில் தூக்கி எறிந்து விடலாம் என திட்டம் வகுத்துள்ளார்கள். அதன்பின்னர் மறுநாள் காலை ஜனவரி 2 ஆம் தேதி வாடகை கார் ஒன்று எடுத்துக்கொண்டு அவரும், கனிவளவனும் ஏற்காட்டுக்கு வந்து சூட்கேஸை எறிந்து விட்டு வந்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதை அடுத்து நடராஜன் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த கனிவளவனை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவர்கள் இரண்டு பேரையும் ஏற்காடு மாஜிஸ்திரேட் முன்பு போலீசார் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.