தமிழ்நாட்டில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ம் தேதி ஒரே கட்டமாக லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.
இந்த நிலையில் தான் பொதுமக்கள் எவ்வளவு பணத்தை ஆவணங்களின்றி கையில் எடுத்து செல்லலாம். ஒருவேளை அதிக பணத்தை எடுத்து சென்று பறக்கும்படையிடம் சிக்கினால் அடுத்து என்ன நடக்கும்? என்பது பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்தியாவில் கடந்த 2019-ல் லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடந்தது. அதேபோல் தான் வரும் லோக்சபா தேர்தலும் 7 கட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டாலே பல்வேறு நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிடும்.
இந்த நடத்தை விதிகள் தேர்தல் ரிசல்ட் வெளியாகும் வரை அமலில் இருக்கும். முறைகேடுகள் நடைபெறுவதை தடுத்து அமைதியான முறையில் தேர்தல் நடத்துவத்காக தான் இந்த நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் இந்தியாவில் நேற்று முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டன. அப்போது ஆவணங்கள் இன்றி எடுத்த செல்லப்படும் பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் மக்கள் பலருக்கும் சந்தேகம் எழுந்துள்ளது.
அதாவது நடத்தை விதி அமலில் உள்ளதால் எவ்வளவு பணம் கையில் எடுத்து செல்லலாம் என பலரும் குழம்பி உள்ளனர். இனி குழப்பம் வேண்டாம். அதாவது நடத்தை விதி அமலில் இருந்தாலும் கூட பொதுமக்கள் ரூ.50 ஆயிரத்துக்குள்ளான ரொக்கப்பணத்தை தாராளமாக எடுத்து செல்லாம்.

பறக்கும்படையினர் மறித்தால் பணத்துக்கான உரிய காரணத்தை கூறிவிட்டு செல்லலாம். தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ளதால் தஞ்சாவூர் மாவட்டத்தில் 25 இடங்களில் வாகன சோதனை சாவடிகள் ஏற்படுத்தப்பட்டு வாகனங்கள் தீவிர சோதனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாட்டில் பறக்கு படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சரக்கு வாகனத்தில் வந்த பாலாஜி என்பவரிடம் இருந்து 2.70 பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

அப்போது விசாரணையில் கந்தர்வகோட்டை, கரம்பக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் எண்ணெய் விற்பனை செய்து விட்டு வசூலான தொகையுடன் பாலாஜி வந்துள்ளார் என்பது தெரியவந்தது.
மேலும் 2 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால், பறக்கும் படை அதிகாரி கூட்டுறவு சார்பதிவாளர் சித்திரவேல் தலைமையிலான அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்து ஒரத்தநாடு தாசில்தார் சுந்தரச் செல்வியிடம் ஒப்படைத்தனர்.