இலவச மனை பட்டா வழங்கவும், பட்டா கொடுத்தும் அளந்து கொடுக்காத வருவாய் அலுவலர்களை கண்டித்து, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பழங்குடி இருளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் 200க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.
விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் அதிக அளவு வாழ்ந்து வரும் பழங்குடி மக்கள் பழங்குடி இருளர்கள் தான். இவர்கள் பெரும்பாலும் நீர் பிடிப்பு பகுதிகளில் தான் வசித்து வருவார்கள். ஏரிக்கரை, குளக்கரை ஆகிய நீர் பிடிப்பு பகுதியில் வசித்து வரும் இவர்களுக்கு பட்டா நிலம், வீட்டு மனை பட்டா ஆகியவை கிடையாது சில ஊர்களில் சிலருக்கு இலவச மனை பட்டா வழங்கி அரசு வீடு கட்டியும் கொடுத்திருக்கிறது.

விழுப்புரம் மாவட்டம் விழுப்புரம், விக்கிரவாண்டி, கண்டாச்சிபுரம், திருவெண்ணை நல்லூர் ஆகிய வட்டத்தில் வாழும் பழங்குடி மக்கள் பெரும்பாலானோருக்கு மனை பட்டா கிடையாது. சிலருக்கு மனை பட்டாக்கள் கொடுத்தாலும் அவற்றை முறையாக வருவாய் துறை அளந்து கொடுப்பதில்லை. மேலும் சிலருக்கு அரசு பசுமை வீடு திட்டத்தின் கீழ் வீடு கட்டித் தரும் திட்டத்தையும் விரிவு படுத்துவதில்லை. இவற்றையெல்லாம் கண்டித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 200க்கும் மேற்பட்ட பழங்குடி இருளர் இன பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர் பழங்குடி இருளர்கள்.

அரசு முறையாக வழங்க வேண்டிய இலவச மனை பட்டா மற்றும் இலவச வீடு ஆகிய திட்டங்களை கிடப்பில் போடாமல் விரைந்து நடத்த வேண்டும் என்றும் தமிழக முதலமைச்சருக்கு இது தொடர்பாக பலமுறை கடிதங்கள் அனுப்பி எந்தப் பயனும் இல்லை. உடனடியாக தமிழக அரசு பழங்குடியினர்களுக்கு மனை பட்டா வழங்கி வீடு கட்டி தர வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசுக்கு எதிராகவும், மாவட்ட வருவாய் துறைக்கு எதிராகவும் முழக்கங்கள் எழுப்பினர்.

சாதி சான்று, வீட்டு மனை பட்டா, வீடு கட்டித்தருதல் என பழங்குடி இருளர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறார்கள் என்கின்றனர். பழங்குடி இருளர்கள் பாதுகாப்பு சங்க நிர்வாகிகள். இதற்கு காரணம் அரசு அதிகாரிகள் மெத்தனப்போக்கே காரணம் என்கின்றனர். மழைக்காலம் என்பதால் குடியிருப்பதில் தங்களுக்கு பெரும் சிரமம் இருப்பதாகவும் கூறுகின்றனர் நிர்வாகிகள்.
போராட்டம்