திருவொற்றியூர் அருகே காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர், கடலில் குதித்து காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாத்தூர் எம்எம்டிஏ 2-வது பிரதான சாலையை சேர்ந்தவர் கிரண்குமார். இவரது மகன் பிரசாந்த் (14), மாதவரம் தபால் பெட்டி சாலையில் உள்ள தனியார் பள்ளியில் படித்து, 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.
அதே பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவரின் மகள் சந்தியா (16), மணலியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து, 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் ஒரு பாடத்தில் தோல்வி அடைந்துள்ளார்.

மாணவன் பிரசாந்த் மற்றும் சந்தியா ஆகிய இருவரும் ஒரே தெருவில் வசிப்பதால், கடந்த ஒரு வருடமாக ஒருவருக்கொருவர் நட்பாக பழகி, பின்னர் காதலர்களாக மாறியுள்ளனர்.
பின்னர், இருவரும் அடிக்கடி வெளியில் சந்தித்து பேசியதால், இவர்களது காதல் அவர்களது பெற்றோருக்கு தெரிந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், படிக்கின்ற வயதில் காதலிக்க கூடாது எனவும், இதனால் உங்கள் எதிர்காலம் பாதிக்கும் எனவும் அறிவுரை கூறி,

இனிமேல் ஒருவரை ஒருவர் சந்திக்ககூடாது, என இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனாலும் இவர்கள், ஒருவரை ஒருவர் பிரிய மனமில்லாமல் பெற்றோருக்கு தெரியாமல் தொடர்ந்து காதலித்து வந்தனர்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் மதியம் பிரசாந்த், காதலி சந்தியாவை பைக்கில் ஏற்றிக்கொண்டு, வீட்டிலிருந்து புறப்பட்டு சென்றார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர், இதுகுறித்து அவர்களின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனே, பெற்றோர், 2 பேரின் செல்போன் நம்பருக்கு போன் செய்த போது அவர்கள் போனை எடுக்கவில்லை. இதனால், 2 பேரும் இரவு வீட்டிற்கு வந்து விடுவார்கள் என இருதரப்பு பெற்றோர்களும் காத்திருந்தனர்.

ஆனால், இரவு 11 மணி ஆகியும் 2 பேரும் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், இதுகுறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர்.
பின்னர், இரு தரப்பினரும் பால்பண்ணை காவல் நிலையத்துக்கு சென்று தனித்தனியாக புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த நிலையில், நேற்று காலை திருவொற்றியூர் நல்ல தண்ணீர், ஓடைகுப்பம் அருகே கடலில் பிரசாந்த், சந்தியா ஆகிய 2 பேரும் பிணமாக மிதப்பதை கண்ட மீனவர்கள், உடனடியாக திருவொற்றியூர் போலீசாருக்கு தகவல் தேரிவித்தனர்.

தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அங்கிருந்த பொதுமக்கள் உதவியுடன் இருவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து திருவொற்றியூர் போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதனிடையே, தங்கள் பிள்ளைகள் கடலில் விழுந்து இறந்த சம்பவத்தை கேள்விப்பட்ட இருவரது பெற்றோர்களும், உறவினர்களும் பதறியடித்துக் கொண்டு நல்ல தண்ணீர் ஓடை குப்பம் கடற்கரைக்கு வந்தனர்.
அங்கே, பிரசாந்த் மற்றும் சந்தியா ஆகியோரின் உடல்களைப் பார்த்து கதறி அழுதது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.