பௌர்ணமி, வார விடுமுறையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் நாளை 810 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என தமிழ்நாடு போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், 23/02/2024 (வெள்ளிக்கிழமை ) 24/02/2014 (சனிக்கிழமை) பௌர்ணமி மற்றும் 23/02/2024 ஞாயிறு சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அப்போது சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி. கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.

மேலும் 23/02/2024 (வெள்ளிக்கிழமை) அன்று 730 பேருந்துகளும் 24/02/2024 (சனிக்கிழமை) அன்று 640 பேருந்துகளும் மற்றும் சென்னை கோயம்பேட்டிலிருந்து நாகை. வேளாங்கண்ணி, ஓசூர். பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 23/02/2024 (வெள்ளிக்கிழமை) அன்று 80 பேருந்துகளும் மற்றும் 24/02/2024 (சனிக்கிழமை) அன்று 80 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஆக தினசரி இயக்க கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக 23/02/2024 (வெள்ளிக்கிழமை) அன்று 810 சிறப்பு பேருந்துகளும் 24/02/2024 (சனிக்கிழமை) அன்று 720 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் மற்றும் பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தற்போது, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலமாக இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட குளிர்சாதனம் கொண்ட 30 பேருந்துகள் சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலைக்கு பிப்.23 மற்றும் பிப்.24 ஆகிய நாட்களில் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முன்பதிவு செய்து பயணிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும் ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த வார இறுதியில் வெள்ளிக்கிழமை பயணம் மேற்கொள்வதற்கு இதுவரை 7,702 பயணிகள் சனிக்கிழமை 2,818 பயணிகள் மற்றும் ஞாயிறு அன்று 7025 பயணிகளும் முன்பதிவு செய்துள்ளனர்.
இந்த சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.” என்று கந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.