கள்ளக்குறிச்சி மாவட்டம், அடுத்த தியாகதுருகம் அருகே பிரிதிவிமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் துரை மனைவி வித்தியா (28).
இவர்களுக்கு திருமாறன் என்ற ஆண் குழந்தை இருந்த நிலையில், நேற்று முன்தினம் மதியம் வழக்கம் போல் சாப்பிட்டு விட்டு விளையாடுவதற்காக வெளியே சென்ற மகன் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

இதனை அடுத்து அக்கம்பக்கம் உள்ளிட்ட பல இடங்களிலும் மற்றும் உறவினர் வீடுகளிலும் தேடியும் எங்கும் கிடைக்காத்தால் இது குறித்து உடனடியாக தியாகதுருகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
பின்னர் புகார் அளித்ததன் பேரில் போலீசார் பல்வேறு இடங்களில் சிறுவன் குறித்து விசாரணை மேற்க்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் அருகில் உள்ள கிணற்றில் சிறுவன் தவறி விழுந்து இருக்கலாம் என்ற கோணத்தில் நேற்று முன்தினம் தீயணைப்பு வீரர்கள் மூலம் அதேபகுதியில் உள்ள கிணற்றில் இறங்கி இரவு முழுவதும் தேடினர்.
பின்னர் நேற்று சந்தேகத்தின் பேரில் அதே பகுதியில் உள்ள விக்கிரமாதித்தன் என்பவரது விவசாய கிணற்றில் கணினி தொழில் நுட்ப வசதியுடன் கூடிய கேமராவை பயன்படுத்தி சோதனை செய்தனர்.

அதில் அந்த சிறுவனது உடல் இருப்பது தெரியவந்தது. பின்னர் தியாகதுருகம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு சிறுவனின் உடலை மீட்டனர்.
காணாமல் போன 7 வயது சிறுவன் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.